தமிழக மக்களை சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுக்க வந்துள்ளேன்... யெச்சூரி
உளுந்தூர்பேட்டை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால், அது அகில இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் இணைந்தன.
இதனால், இந்தக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்தவகையில், தேமுதிக தலைவரும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார் சீதாராம் யெச்சூரி.
அப்போது அவர், "தமிழக மக்களை சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுக்க டெல்லியில் இருந்து வந்துள்ளேன். இந்த நாடு ஒரு நெருக்கடியில் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டிற்கு புதிய பாதைகள், திட்டங்கள், கொள்கைகள் தேவைப்படுகிறது.
இந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒரு நேர்மையான, லஞ்சம் லாவண்யம் அற்ற மக்கள் நலம் பாதுகாக்கின்ற அரசாங்கம் அமைய வேண்டும். அதற்கு மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.