சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு: 4 பேரின் ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ் செய்த நீதிபதி
சிவகங்கை: சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் கண்டக்டர் மற்றும் சிறுமியின் உறவினர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கையை சேர்ந்தவர் பள்ளி சிறுமியை தந்தை, அண்ணன் உள்பட ஏராளமானோர் கடந்த பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் சுகந்தியின் தந்தை, உறவினர்கள், சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ, கண்டக்டர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர், ஏடிஜிபி என சுமார் 28 பேர் வரை பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்யதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிகளை தப்ப வைக்க முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படை சிபிசிஐடி போலீசார் சிறுமி பாலாத்கார வழக்கினை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சிவகங்கை மகிளா நீதிமன்றம் எஸ்ஐ சங்கரின் ஜாமீன் மனு, இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில், கண்டக்டர் நமச்சிவாயம், சிறுமியின் உறவினர் சிவகங்கையை சேர்ந்த முத்துராக்கு ஆகியோர் சார்பில் சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜெயராஜ் நேற்று விசாரித்து, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவர்களது ஜாமீன் மனுக்களும் ஏற்கனவே ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கைதானவர்களில் ஒருவரான எஸ்.கார்த்திகேயன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு செய்திருந்தார். சிவகங்கையைச் சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் என்பவர் முன்ஜாமீன் மனு செய்திருந்தார். இரு மனுக்களையும் நீதிபதி வி.எம்.வேலுமணி நேற்று விசாரித்தார். கார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. இதில் ஜாமீன் வழங்க உத்தரவிட முடியாது. எனவே, மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது'' என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் மணிவண்ணனின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக, அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மனுவையும் டிஸ்மிஸ் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.