சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: தலைமறைவாக இருந்த அத்தை கைது
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி பலத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தலைமறைவாக இருந்த அத்தை தாமரைச் செல்வி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மதுபோதைக்கு அடிமையாக்கி சீரழித்தது அத்தைதான் என்றும் தன் மீது பழி வராமல் இருக்க சிறுமியின் தந்தை, சகோதரன் மீது பழி சுமத்தி அவர்களை கைது செய்ய வைத்துள்ளதாகவும் புகார் வரவே தாமரை செல்வியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கையைச் சேர்ந்த சிறுமியை, தாத்தா, தந்தை, சகோதரன் தந்தையின் நண்பர்கள், அண்ணனின் நண்பர்கள், வழக்கறிஞர், போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், மளிகைக்கடை உரிமையாளர், மதுரையில் உள்ள பிரபல ஹார்ட்வேர் கடையின் உரிமையாளர், ஹோட்டல் முதலாளி என 28 பேர் 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் தாத்தா, தந்தை, அண்ணன், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
28 பேர் தொடர்புடைய இந்த வழக்கில் சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட 10 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் அத்தை தாமரைச் செல்வியை ஒரு வாரமாக சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.
சிவகங்கை ஆரோக்கியநகர் மற்றும் மஜித் ரோட்டில் தாமரைச்செல்வி தங்கி இருந்தபோது அவரது பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சிறுமி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் அத்தை தாமரைச்செல்வி ஆகியோரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். பிடிபட்ட தாமரைச்செல்வியிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாமரைச் செல்வி மீது புகார்
அத்தை தாமரை செல்விதான், சிறுமியை பலருக்கும் அழைத்துச் சென்று முறைகேட்டுக்கு உட்படுத்தி உள்ளார். காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று புகார் கொடுத்தவரும் இதே தாமரை செல்விதான் என்று சிறுமியின் தந்தையும் சகோதரனும் குற்றம் சாட்டியுள்ளனர். குடும்பப் பிரச்னையில் பழிவாங்க, என்னுடன் தொடர்பில்லாமல் வளர்ந்த என் மகளை வைத்து அபாண்டமான பழியை தாமரைச்செல்வி சுமத்தியிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
எஸ்.ஐ சங்கர் மறுப்பு
எஸ்.ஐ. சங்கர், கண்டக்டர் நமச்சிவாயத்தை போலீஸ் விசாரித்த போது, சிறுமியின் அத்தை தாமரைச் செல்வியுடன் மட்டும் தொடர்பு இருந்தது. தாமரைச்செல்வி தங்களை மிரட்டி பணம் பறிப்பதற்காக அபாண்டமான புகாரை சிறுமி மூலம் கொடுக்க வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கின்றனர்.
சிறுமியிடம் விசாரணை
இதேபோல சென்னையில் தங்கி இருக்கும் சிறுமியிடம் சிபிசிஐடி ஏ.எஸ்.பி. நம்பிராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஜெனோவா, ராதிகா ஆகியோர் விசாரணை நடத்தினர். மாஜிஸ்திரேட்டிடம் சிறுமி அளித்த ரகசிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் 28 பேரின் போட்டோக்களை காண்பித்து விசாரணை நடைபெற்றது.
திசை மாறுகிறதா வழக்கு
சிறுமி பலாத்கார வழக்கில் சப்.இன்ஸ்பெக்டர் முதல் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை பலருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது, அத்தைதான் சிறுமியின் சீரழிவிற்குக் காரணம் என்று வழக்கு திசை மாறத்தொடங்கியுள்ளது. இது காவல்துறை அதிகாரிகளை தப்ப வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கையா? அல்லது அதிகாரிகளின் மேல் தாமரைக் செல்வி வேண்டும் என்றே பழி சுமத்தினாரா என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.