தமிழ்நாட்டிலா இந்த கொடுமை... 15 வயது சிறுமியை திருமணம் செய்ய 4 முறை கடத்தல்!
சிவகங்கை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்கக்கோரி 40 வயது நபரின் ஆசைக்கு பெற்றோர் ஒப்புகொள்ளாததால் சிறுமி 4வது முறையாக கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சிவகங்கை : திருமண ஆசையில் 40 வயது நபர் 15 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ள சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4வது முறையாக கடத்தி செல்லப்பட்ட சிறுமியின் நிலை என்னவென்று தெரியாமல் அவரது பெற்றோர் கவலையில் உள்ளனர். காவல்துறையினர் தங்களின் மகளை கண்டுபிடித்துத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவில் வசிப்பவர் முருகன் இவரது மகள் நிவேதிதா 10 ம் வகுப்பு படித்து வருகிறாள் . மணப்பாறை பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது சென்னை குரோம் பேட்டையில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி சிறுமி நிவேதாவையும் அவரது தாயையும் காரில் கடத்தி சென்றுள்ளார்.
பிரான்மலை அருகே செல்லும் போது தாயை மட்டும் இறக்கி விட்டுவிட்டு சிறுமியுடன் மணிகண்டன் தலைமறைவானார்.
கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர். தற்போது கடத்தப்பட்ட சிறுமி நிவேதா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே போல மணிகண்டனால் கடத்தப்பட்டுள்ளார்.
திருமணம் செய்ய விருப்பம்
நிவேதாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மணிகண்டன் நிவேதாவின் தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு 15 வயதே ஆன பெண்ணை எப்படி 40 வயதானவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும் என மறுத்துள்ளனர். இதனையடுத்து நிவேதாவை காரில் கடத்திச் சென்று ஒருநாள் பெற்றோரை மிரட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்.
சித்தப்பா முறை உறவு
மணிகண்டன் சிறுமி நிவேதாவுக்கு சித்தப்பா முறையிலான தூரத்து உறவு என்றும் சொல்லப்படுகிறது. இதனால் நிவேதாவின் பெற்றோர் முதல்முறை போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. ஆனால் இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் சிறுமியின் வீட்டுக்கு வந்த மணிகண்டன் பெண் கேட்டுள்ளான். பெற்றோர் மறுத்து பேசவே கத்தியை காட்டி மிரட்டி பட்டபகலில் சிறுமி நிவேதாவை கத்தி முனையில் மீண்டும் கடத்திச் சென்றுள்ளான்.
நிவேதாவை கடத்திய மணிகண்டன்
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு தர கோரி சாலை மறியல் செய்தனர் . காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது . பிரச்சனை பெரிதாக ஆனதால் காவல்துறையின் நெருக்கடியின் காரணமாக மீண்டும் வந்து நிவேதாவை பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளான் மணிகண்டன். காவல்துறை அதிகாரிகளும் மணிகண்டன் மீது அப்போதே வழக்கு பதிவு செய்யாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
2வது முறை கடத்திய போது புகார்
திருமணமாகி 3 குழந்தைகளின் தந்தையான மணிகண்டனுக்கு 12ம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவரும் உள்ளார். மகள் வயதுள்ள நிவேதாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஒரு மாத இடைவெளியில் மீண்டும் சிறுமி வீட்டுக்கு வந்த மணிகண்டன் நிவேதாவை கத்தியை காட்டி மிரட்டி பட்ட பகலில் காரில் கடத்தியுள்ளான். 2வது முறையாக நிவேதாவின் பெற்றோர் சிங்கம்புணரி காவல்துறையில் புகார் அளித்தனர்.
குண்டர்சட்டத்தில் கைது
மணிகண்டன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், மூன்று முறை சிறுமியை கடத்தியதால் குண்டர் சட்டத்தில் அவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்ற வாரம் தான் குண்டர் சட்டத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் சிறுமி நிவேதாவை பட்டாகத்திகளுடன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளான்.
4வது முறையாக கடத்தல்
சிறுமி கடத்தப்பட்டு 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரின் நிலை என்னவென்று தெரியாமல் நிவேதாவின் பெற்றோர் கவலையில் உள்ளனர். சிறுமியை மீட்கும் வழி தெரியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். இதனால் மணிகண்டன் பற்றி பொதுஅறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நிவேதாவின் தந்தை கயிற்றுக்கட்டில் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். கூலி வேலை செய்தே இந்தக் குடும்பம் வாழ்கிறது.
போலீஸ் நடவடிக்கை போதவில்லை
தங்களுடைய மகள் ஏற்கனவே 3 முறை கடத்தப்பட்ட போது அவரை மீட்பதற்காக ரூ. 2.5 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாகவும், இந்த முறை மீட்க பணமும் இல்லை போலீசாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று நிவேதாவின் பெற்றோர் கூறியுள்ளனர். காவல்துறையினர் முதல்முறையே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.