ஆடிப் பாடி திருக்குறளை கற்பிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்....!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது.
அந்த முகாமில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இசையோடும், நடனத்தோடும் ஆடிப் பாடியபடி திருக்குறளை கற்பித்தது அனைவரையும் கவர்ந்தது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் முத்தமிழ் குறள் நிகழ்வு செயல் வழி கற்பித்தல் பயிற்சி நடை பெற்றது. பயற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேஸ்வரி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
அன்னையிடம் ராகத்துடன் கற்ற திருக்குறள்
நிகழ்ச்சியில், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில், என் அன்னை தொடக்கப்பள்ளி ஆசிரியை. அவரிடம் தான் நான் முதலில் திருக்குறள் கற்றேன். அவர் சொல்லி கொடுத்த ராகத்துடன் இங்கே நான் திருக்குறளை படி காண்பிக்கின்றேன்.
அகரம் தான் தமிழுக்கு சிகரம்
அகரம்தான் தமிழுக்கு சிகரம். இந்தியாவில் பிறந்ததால் தான் திருக்குறளை படிக்கும் பாக்கியம் பெற்றோம். சீன நாட்டினர் ஒரு திருக்குறள் முழுமையாக பொருள் புரிந்து படித்தால் பல கோடிகளை பணமாக சம்பாதித்து விடுவோம். அவ்வளவு பொருள் அதனில் பொதிந்துள்ளது என கூறுகின்றனர். 1330 திருக்குறளை நம்மிடம் நமது தாய்மொழியில் வைத்துள்ள நாம் அதனை சிறுவயதிலிருந்தே படிக்க வேண்டும் என கூறினார்.
இசையோடு பாடிக் காண்பித்தார்
பின்னர் அகர முதல என்று தொடங்கும் குறலையும், கற்றதனால் என்ற குறளையும் இசையோடு பாடிகாண்பித்தார் அவர்.
நடனத்துடன் திருக்குறள்
இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் திருக்குறளை அபிநயத்தோடு ஆரம்பித்தார். மாணவர்கள் எந்தக் கலையையும் பெரிதாக நினைத்து அறிந்து செயல்பட வேண்டும். திருக்குறளில் விளையாட்டு விளையாட போகிறோம் என்றவுடன் மாணவர்கள் உற்சாகமாக கவனித்தனர்.
முத்தமிழ் எவை?
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இவற்றை பற்றி மாணவர்களிடையே விளக்கம் கேட்டே அறிய வைத்தார் அவர். எண் வரக்கூடிய திருக்குறளை சொல்லச் சொல்லி அந்தக்குறளை நடித்துக் காட்டினார். எட்டு, ஒன்பது தவிர மற்ற எண்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறள் சொல்லி அதற்கு நாட்டியம் ஆடிக் காட்டினார். மேலும் எழுத்து ,சொல்,பொருள்,யாப்பு,அணி போன்றவற்றை விளையாட்டாக கேள்விகள் கேட்டு அதற்குரிய குறளை மாணவர்களை சொல்லவைத்து அதற்கு ஆடிகாட்டினார் . கதை கூறியும், நடனமாடியும்
அகர முதல, எண்ணென்ப, ஒருமையுள், கற்க, சொல்லுக, நன்றி, துப்பார்க்கு, நன்றிக்கு வித்தாகும், ஒருமையும் ,உடுக்கை போன்ற பல குறள்களுக்கு நடனம் ஆடி காட்டி மாணவர்களை நடன அசைவின் மூலமாகவே குறள் சொல்ல துண்டினார். எப்பொருள் என்ற குறளுக்கு கதைகூறி நடனம் ஆடி பல அபிநயங்களை செய்து இசையோடு பாடமுடியும் என்பதை செய்து காட்டினார்.
மாணவிகளின் குறள் ஆட்டம்
இசை, நடனத்தோடு கற்பித்தால் திருக்குறளையும் எளிதாக மனப்பாடம் செய்யாமல் மனதில் பதிய வைக்கலாம் என்பதை பரமேஸ்வரி, சொர்ணம்பிகா, பவனா, புனிதா, ராஜேஸ்வரி, நித்யகல்யாணி ஆகிய மாணவிகளை அகர முதல என்ற குறளை நடனம் ஆடி இசையோடு கற்று கொடுத்து அவர்களையும் ஆட வைத்தார். திருக்குறளை எளிதாக எவ்வாறு எளிதாக படிக்கலாம் என்பதை 'அ க ம வே இ பொ த அ கோ பி' என்ற சூத்திரத்தின் மூலமாக முதல் அதிகாரத்தில் உள்ள பத்து குறளுக்கும் முதல் எழுத்தை நினைவில் வைத்துக் கொண்டால் இதனை ஏறு வரிசையிலும்,இறங்கு வரிசையிலும் நினைவில் வைத்து சொல்லலாம் எனக் கூறினார். ஒரே மாதிரியாக வரக்கூடிய இரண்டு குறள்களையும் ,மூன்று பாலிலும் இடம் பெறக்கூடிய ஒவ்வொரு குறளையும் நடனத்துடன் ஆடி ,பாடி காட்டினார்.
குறளுக்கு அபிநயம் பிடித்த மாணவிகள்
திருக்குறளை நடனமாடி சொல்லி கொடுத்ததை கற்று கொண்ட மாணவிகளில் கிருஷ்ணவேணி, காயத்ரி, தனலெட்சுமி, கீர்த்தியா, மாணவர்கள் பவித்ரன், நடராஜன், சூரியா, நவீன்குமார் ஆகியோர் மேடையில் நடனத்துடன் ஆடி காண்பித்தனர்.
படிப்பறிவா ? பட்டறிவா?
பரமேஸ்வரி என்ற மாணவி திருக்குறளை இவ்வளவு அழகாக நடனத்துடன் சொல்லி கொடுக்கிறிர்களே? இது படிப்பறிவா ? பட்டறிவா? என கேள்வி கேட்டார். அதற்கு சுந்தர மகாலிங்கம் குறளை படித்துதான் அறிந்து கொண்டேன் என பதில் கூறினார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில் ,நான் மதுரை மாவட்டம் பரவையை சார்ந்தவன். கரூர் மாவட்டம் மஞ்சபுளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.
இலவச சேவை
திருக்குறள் மீது ஆழந்த ஈடுபாடு கொண்டதனால் இசை,நடனம் மற்றும் பாவனைகளுடன் அவற்றை பால்வாடி மாணவர்கள் முதல் பல்கலைகழக மாணவர்கள் வரை தேடி சென்று இலவச சேவையாக இதனை செய்து வருகின்றேன். (எனது கைபேசி எண் :9626365252) அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி,தனியார் பள்ளி,கல்லூரிகள்,பல்கலைகழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் எந்த பாகுபாடும் காட்டாமல் சென்று இசையோடு கற்பித்தால்,திருக்குறளை எளிதாக அனைவர் மனதிலும் பதிய வைக்கலாம் என்ற நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றேன். மாணவ,மாணவியர் பயற்சியின் நிறைவாக மேடையில் பேசும்போது நாங்களும் இதே போன்று திருக்குறளைக் கற்று நடனமாடி இசையோடு பள்ளிகளுக்கு சென்று கற்றுக் கொடுப்போம் என உறுதியோடு கூறினர். நிகழ்ச்சியின் நிறைவாக சௌமியா என்ற மாணவி நன்றி கூறினார். பயிற்சியை ஆசிரியை முத்து மீனாள் தொகுத்து வழங்கினார்.