சிவாஜி சிலையும்… முதல்வரின் மணிமண்டபம் அறிவிப்பும்!
சென்னை: கடற்கரைச் சாலையில் காந்தி சிலையின் எதிரே வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவதை பற்றி முடிவெடுக்க அரசுக்கு ஒருவாரம் அவகாசம் அளித்த உயர்நீதிமன்றத்தின் கெடு முடிய உள்ள நிலையில், திடீரென்று சட்டசபையில் சிவாஜிக்கு அடையாறில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து சிவாஜி ரசிகர்களையும், நடிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கடற்கரையில் காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை எதிரே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார். சிவாஜிக்கு சிலை அமைக்க அவரது வீடு இருக்கும் செவாலியே சிவாஜி சாலை - தியாகராயர் சாலை சந்திப்பு, சிந்தாதிரிப்பேட்டை - அண்ணா சாலை சந்திப்பு, கடற்கரைச் சாலையில் தலைவர்கள் சிலைகள் இருக்கும் வரிசையில் ஏதாவது ஓர் இடம் என மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் ராணி மேரி கல்லூரி, டிஜிபி அலுவலகம் சந்திக்கும் இடத்தில் சிலை அமைக்கப்பட்டது.
காந்தி சிலை எதிரே
மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் சிலை அருகில் சிவாஜி சிலை இருக்கிறது. காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்று சர்ச்சை கிளம்பியது.
போக்குவரத்து இடையூறு
காமராஜர் சாலையில் இருந்து வலப்புறமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் வாகன ஓட்டிகளுக்கும், அதே போல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வலப்புறமாக சாந்தோம் நெடுஞ்சாலைக்கும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இந்த சிலை இடையூறாக அமைந்துள்ளது எனவும் கூறி நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மெரீனா கடற்கரையில்
காமராஜர் சாலையை கடக்கும் பாதசாரிகளை இந்த சிலை மறைத்து விடுவதால் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். சிவாஜி கணேசன் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரது சிலையை மெரினா கடற்கரையில் முன்பக்கம் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலையோடு, இவரது சிலையை வைத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' எனவும் தெரிவித்திருந்தார்.
அகற்ற முடிவு
இந்த மனு குறித்த விசாரணை கடந்த 2014ம் ஆண்டு வந்த போது, போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்ற முடிவு செய்துவிட்டதாக கூறி அரசியல் தலைவர்களும், சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அகற்ற எதிர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று கூறி நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சிலையை அகற்றக்கூடாது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்தார். சிவாஜி கணேசன் சிலையை அகற்றினால் பொதுமக்களின் மனதை புண்படுத்தும். எனவே சிலையை அகற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுக்கள் நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் சசிதரன் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது. மனுக்களை விசாரித்த அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிவாஜி சிலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்றலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி உத்தரவிட்டனர்.
ரசிகர்கள் எதிர்ப்பு
இதனையடுத்து சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்ற முடிவு செய்துவிட்டதாக கூறி அரசியல் தலைவர்களும், சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே சிலையை அகற்றும் முடிவை ஆறப்போட்டது அதிமுக அரசு
அவமதிப்பு வழக்கு
இதனிடையே சிலையை அகற்றுவது பற்றி தமிழக அரசு முடிவெடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை கடந்த 5ம் தேதி விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஒரு வாரம் அவகாசம்
கடந்த 19ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்டு தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மணிமண்டபத்தில் சிலை
சிலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அளித்த ஒருவார கெடு முடிந்து விட்டது. சிலையை அகற்றுவதாக அறிவித்தால் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள் எனவேதான் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி அந்த மண்டபத்தில் சிலையை நிறுவ முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. எனவேதான் சிலை குறித்த அரசின் முடிவை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி தெரிவிக்கும் போது அதிக அளவில் எதிர்ப்புகள் எழ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
13 ஆண்டு கால கோரிக்கை
சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 13 ஆண்டுகால கோரிக்கை இதனை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிய ஜெயலலிதாவே அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சிவாஜியை வைத்து எப்படி எல்லாம் அரசியல் நடக்குதுப்பா!