சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் ஓங்கி ஒலிக்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைவு
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கவும் அங்கே தமிழின் தேவாரம் ஒலிக்கவும் தொடர்ந்து போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி இன்று மறைந்தார்.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீட்சிதர்களிடம் இருந்து மீட்க போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்தார்.
சிதம்பரம் அருகே குமுடிமலை கிராமத்தில் 94 வயதான சிவனடியார் ஆறுமுகசாமி இன்று உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதனை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பையும் அனாயசமாக எதிர் கொண்ட இவரின் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே தமிழகத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது.
இதுதொடர்பாக நேருக்கு நேராக தீட்சிதர்களுடன் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு, 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பும் பலம் சேர்த்தது. தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி தேவாரத்தை வெற்றியின் களிப்போடு ஓங்கி பாடினார்.
அதே போன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நடராஜர் கோயிலை தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர் ஆறுமுகசாமி. சமநீதி, சமூகநீதி, மொழிக்காக ஆன்மிக தளத்தில் நின்ற போராடிய உயிர் இன்று தமிழகத்தில் இருந்து பிரிந்து தமிழர்களை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.