ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக போட்டியில்லை- திமுகவின் திருச்சி சிவா வெற்றி உறுதி!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை. இதனையடுத்து மனுதாக்கல் செய்துள்ள தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா மற்றும் அ.தி.மு.க. - சி.பி.எம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே. ரங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளே தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ் ஆகிய 4 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ரங்கராஜனும் நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு பரிசீலனை போது அது நிராகரிக்கப்படும்.
இந்த தேர்தலில் தமிழகத்திலுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருப்பதால், அனைவரும் வாக்குப்பதிவு இல்லாமல், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவின் இளங்கோவன், திமுகவின் கனிமொழி இடையே போட்டி ஏற்பட்டது. இதில் கனிமொழி 31 வாக்குகளைப் பெற்றதாலேயே அவர் வென்றார்.
இந்த முறை தேமுதிக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ராஜ்யசபா தேர்தலைப் பற்றி எந்த வித அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக இருந்துவிட்டது.