அமைச்சர் செல்லூர் ராஜூ ஆபிசில் குண்டு வீசிய வழக்கு... அதிமுக மாஜி நிர்வாகி உட்பட 6 பேர் கைது
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரை அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட இணை செயலர் பசும்பொன் பாண்டியன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தொகுதி அலுவலகம் மற்றும் பனகல் ரோட்டில் அதிமுக கட்சி அலுவலகம் ஆகியவற்றில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக கூட்டம் நடக்க இருந்த கல்லூரி மைதான பொதுக்கூட்ட மேடையருகிலும் குண்டுகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதிச்சியம், எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட இணை செயலர் பசும்பொன் பாண்டியன் பசும்பொன் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், உள்கட்சிப் பூசல் காரணமாக இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே, அமைச்சர் செல்லூர் ராஜூவின் மேற்கு தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியதாக, 'சிடி' தயாரித்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியவர் தான் இந்த பசும்பொன் பாண்டியன்.
இதனால், அமைச்சர் செல்லுார் ராஜு துாண்டுதலால் தன்னை வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாக, பசும்பொன் பாண்டியன் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பசும்பொன் பாண்டியன் உட்பட ஆறு பேரைத் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர் விபரமாவது, விளாங்குடி கண்ணன், முத்துப்பாண்டி, மணி, அஜ்மல்கான் மற்றும் வீரபத்திரன் ஆகும்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘‘அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும், அதிமுக அண்ணா தொழிற்சங்க முன்னாள் இணைச்செயலாளர் பசும்பொன்பாண்டியனுக்கும் இடையே அரசியல் முன் விரோதம் உள்ளது. தன் வீட்டின் மீது பாட்டில் வீசியது உள்ளிட்ட சம்பவங்களுக்கு பழிக்குப் பழியாக பசும்பொன்பாண்டியன் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாடு கண்ணன், பாறைக்குட்டம் மாடசாமி ஆகிய 2 பேரை அழைத்து வந்து, மதுரையில் ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் தங்க வைத்து, வெடிகுண்டு தயாரித்துள்ளனர். மணி, கண்ணன், அஜ்மல், மாடசாமி ஆகியோர் டூவீலர்களில் சென்று சம்பவ இடங்களில் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றவர்கள் உதவியாக இருந்துள்ளனர்,'' என்றார்.