ராஜ்யசபா தேர்தல்: அதிமுக, திமுகவை சேர்ந்த 6 பேர் ஏகமனதாக தேர்வு
சென்னை: ராஜ்யசபா உறுப்பினர்களாக அதிமுக, திமுகவை சேர்ந்த 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்குஜூன் 11ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இவற்றில் தமிழகத்தில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான 6 இடங்கள் காலியாகின்றன.
இந்த 6 இடங்களுக்காக அதிமுகவில் இருந்து வைத்தியலிங்கம், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், திமுகவில் இருந்து ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 6 பேர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7 சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். பிற்பகல் 3 மணிக்குள் எந்த மனுக்களும் வாபஸ் பெறப்படவில்லை. இதனையடுத்து அதிமுக சார்பில் நான்கு பேரும், திமுக சார்பில் இரண்டு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான ஏ.எம்.பி.ஜமாலுதீன், ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்குரிய சான்றிதழ்களை வழங்கினார். திமுக எம்.பிக்கள் ஆஸ்.எஸ் பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 13 ஆக உயர்ந்துள்ளது. லோக்சபாவில் 37 எம்.பிக்கள், ராஜ்யசபா13 எம்.பிக்கள் என நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் அதிகரித்துள்ளது.