அடுத்தடுத்து பாயும் வழக்குகள்.. இதுவரை 60 பேர் கைது.. அசராத நாம் தமிழர் கட்சி!
நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: நாம் தமிழர் கட்சி மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை மீம்ஸ் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்' என அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். ' எங்கள் முன்னோர்கள், ஆங்கிலேயே ஜெனரல்களின் அடக்குமுறைகளை எதிர்த்தவர்கள். போலீஸின் இந்த அடக்குமுறையை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை' என சீரியஸாக விவாதித்துள்ளனர்.
சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டி முற்றுகைப் போராட்டத்துக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, இன்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ' ஐ.பி.எல் போராட்டத்துக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சி மேல் போடப்பட்ட வழக்குகள் ஆறு.
இவ்வழக்குகளிலும் முன்னெச்சரிக்கை கைது என்ற வகையிலும் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர வீட்டில் தேடிப்போய் ஆள் இல்லையென்றால் வீட்டிலிருக்கும் இளைய பிள்ளைகளை காவல் நிலையம் கூட்டிசெல்வது, அலைபேசிகளை எடுத்துச்செல்வது எனப் போலீஸார் செயல்பட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல் போராட்டத்தில் காவல்துறையினர் தாக்குதலை தடுத்து விலக்கிவிட்ட சீமான் உள்ளிட்ட 10 பேர் மேல் கொலைமுயற்சி வழக்குகள், சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்து கூட்டம் போட்டதற்கு சீமான், பியூஸ் மனுஸ் உள்ளிட்ட 10 பேர் மேல் கொலைமுயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. சம்பவ இடத்தில் இல்லாதபோதும் தூண்டிவிட்டதாகவும் சம்பவ இடத்தில் இல்லாத காவல் ஆய்வாளரின் இரு சக்கர வண்டியின் முகப்பை உடைத்ததாகவும் சீமான் உள்ளிட்ட 7 பேர் மேல் திருச்சி விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதுதவிர, கதிராமங்கலத்தில் நிகழ்ச்சி நடத்தியவர்களும் அதில் கலந்து கொண்ட மற்ற அரசியல் கட்சியினரையும் விட்டுவிட்டு நாம் தமிழர் கட்சி கலந்து கொண்டதற்காக நேற்று இரவில், என்ன வழக்குக்காக கைது செய்கிறோம் என்று சொல்லாமலேயே கைதுசெய்கிறார்கள். அனைத்து பொறுப்பாளர்களின் வீடுகளுக்கும் சென்று தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். எனவே, காவல்துறை யாரையேனும் அழைத்தாலோ வீட்டுக்கு வந்தாலோ உடனடியாக கட்சி பொறுப்பாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தலைமைக்கும் தெரியப்படுத்துங்கள்.
அவர்களுக்குப் பொறுப்பாக பதிலளியுங்கள். தைரியமாக ஏன் எதற்கு என்ற கேள்விகளை முன்வையுங்கள். நம் கட்சி மீதான இந்த திட்டமிட்ட ஒடுக்குமுறையை எந்த ஊடகமும் பதிவு செய்யாது. நாம்தான் பரப்புரை செய்து இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரியவைக்க வேண்டும். பதிவுகள் மூலமாக மீம்ஸ் மூலமாக மக்களிடம் எடுத்துச்சொல்லும் பணியை மேற்கொள்ளுங்கள். பெரும் பணி உங்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து விரைவாகவும் நிதானத்தோடும் செயல்படுங்கள். திட்டமிட்ட அடக்குமுறை நாம் தமிழர் கட்சி மேல் ஏவப்பட்டிருக்கிறது.
ஏவியவர்கள் யாரென்று யூகிக்கமுடியாமலோ தெரியாமலோ இல்லை. அவர்களுக்கு பணிவன்போடு சொல்லிக்கொள்கிறோம். எங்கள் முன்னோர்கள் மீது துப்பாக்கி நீட்டிய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்கள் அடக்குமுறையையே பார்த்தவர்கள். அவர்களின் பிள்ளைகள் நாங்கள் இந்த கைது அடக்குமுறையை எல்லாம் சட்டப்படி எதிர்கொள்வோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.