சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்... குழந்தை வரம் கிடைக்கும் கந்த சஷ்டி விரத மகிமை
சென்னை: 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்று நம் ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வதுண்டு. அது 'சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை வளரும்' என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்.
முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் மகா சஷ்டி விரதம் 6 நாட்கள் மேற்கொள்ளும் பெண்களுக்கு திருமணத்திற்குப் பின்னர் எந்த வித தடங்களும் இன்றி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது கந்த சஷ்டி விரதம்' இதனை மகா சஷ்டி விரதம்' என்றும் கூறுவர். இந்த விரதம் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 5ம் நாள். நாளைய தினம் சஷ்டி திதி முருகப்பெருமான் திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த நாளாகும்.
உண்ணா நோன்பு
ஐப்பசி மாதத்தில் சுக்கில பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
சூரசம்ஹாரம்
முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம், கோபம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் சம்ஹாரம் செய்து பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்
கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, முருகனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்
முருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது. முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான். மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்தாகும்.
நாளைய தினம் மகா கந்த சஷ்டி விரதம்... இந்த ஐந்து நாட்களும் விரதம் இல்லாதவர்கள் நாளைய தினம் விரதம் இருந்து முருகனின் அருள் பெருவோம்.