குப்பையில் கிடந்த 4 மனித மண்டை ஓடுகள்.. கை, கால்களின் எலும்புகள்.. திருச்சி கேகே நகரில் பரபரப்பு
குப்பையில் 4 மண்டை ஓடுகள், எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி: மண்டை ஓடுகளும், எலும்புகளும் குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் திருச்சி கேகே நகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், குப்பையில் வீசப்பட்ட இந்த மண்டைஓடுகள், எலும்புகள் நரபலிக்காக பயன்படுத்தப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கே.கே.நகர் சுப்பிரமணியநகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடம் ஒன்று உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அதன் அருகிலேயே நீரேற்று நிலையம் உள்ளதால், தண்ணீர் திறக்க மாநகராட்சி ஊழியர்கள் சிலர் இன்று காலை அங்கு வந்தனர்.
4 மண்டைகள், எலும்புகள்
அப்போது அங்கிருந்த குப்பையில் ஒரு துணி பை இருந்தது. பெரிய மூட்டையாக அந்த துணிப் பை இருந்ததால் அதனை எடுத்து ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். அதில், 4 மனித மண்டை ஓடுகள், கை, கால்களின் எலும்புகள் இருந்தன. அதில் ஒரு மண்டை ஓட்டின் நெற்றியில் குங்குமம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். குப்பையில் மண்டை ஓடு இருந்த தகவல் அப்பகுதி முழுவதும் தீயாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வந்து மண்டை ஓடுகளை பார்த்தனர்.
போலீசார் விசாரணை
இந்த பகுதியில் உள்ள குப்பைகள் எல்லாம் மறுநாள் காலையிலேயே அகற்றப்படுவிடுமாம். அதனால் இந்த துணிப்பையையும் எடுத்து சென்றுவிடுவார்கள் என்று நினைத்து இந்த மண்டை ஓடுகள், எலும்புகளை யாரேனும் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கே.கே.நகர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குப்பையில் கிடந்த மண்டை ஓடுகள், எலும்புகளை ஆய்வு செய்தனர்.
பில்லி, சூனியமா?
இந்த எலும்புகள், மண்டை ஓடுகளை மந்திரவாதிகள் யாரேனும் பில்லி, சூனியம் மற்றும் செய்வினை போன்ற மந்திர காரியங்களுக்காக பயன்படுத்தி விட்டு பிறகு வந்து குப்பையில் வீசிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் யாராவது நரபலி கொடுக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகளாகவும் இவை இருக்கலாம் என்றும் தெரிகிறது.
எலும்புகள் ஆய்வு
மற்றொரு புறம், அறிவியல் ஆராய்ச்சி கூடத்தில் இந்த மண்டை ஓடுகளும், வைக்கப்பட்டு பின்னர் அது தேவையில்லை என்பதால் குப்பையில் போட்டுவிட்டு போயிருப்பார்களோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கே.கே.நகர் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என்பதால் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.