ஜெ., வாழ்க.. மோடி வாழ்க.. நிதின் கட்காரி நிகழ்ச்சியில் ‘கோஷங்களால்’ மோதிக் கொண்ட தொண்டர்கள்
நாகர்கோவில்: சுசீந்திரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்ற விழாவில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் முறையே ஜெயலலிதா வாழ்க, மோடி வாழ்க என போட்டி போட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிய பாலம் கட்டுவது உள்ளிட்ட ரூ.2,838 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுகவினர் அதிமுக கொடியுடன் ஜெயலலிதா வாழ்க எனவும், பாஜகவினர் பாஜக கொடியுடன் மோடி வாழ்க எனவும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் எஸ்.பி., மணிவண்ணன் தலையிட்டு, இரு கட்சியினரிடமிருந்தும் கட்சி கொடிகளை அகற்றி, அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் விழா துவங்கியது.