முத்துபேட்டை போலீசை கலங்கடித்த “பொம்மை” விமானம்- செம்படவன் காட்டில் விழுந்ததால் பரபரப்பு
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிறிய ரக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் விமானம் ஒன்று காட்டுப்பகுதியில் விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை ஒரு கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடுகள் ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய காடுகள் ஆகும். இப்பகுதியில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையினர் எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு அங்காளம்மன் கோவில் அருகே முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் மோதி ரிமோட் விமானம் கீழே விழுந்தது.
அதில் சிறிய ரக விமானத்தில் கேமிரா, கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கேமிராவில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களின் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது. தீவிரவாதிகள் ஆள் இல்லா இந்த விமானத்தை பறக்க விட்டு வேவு பார்த்ததாக தகவல் பரவியது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் ஒரு விளையாட்டு பொருள் என்பது தெரியவந்தது. இந்த விமானம் பட்டுக்கோட்டை சாலையில் வசிக்கும் தமீம் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.
விசாரணையில் அவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருவதும் அங்கிருந்து தனது குழந்தைகளுக்கு ரிமோட் விமானத்தை வாங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
தமீம் தனது வீட்டு மாடியில் இருந்து விமானத்தை பறக்க விட்ட போது அது ரிமோட்டின் கட்டுப்பாட்டை இழந்து செம்படவன் காட்டில் தென்னை மரத்தில் மோதி விழுந்துள்ளது.
இந்த ரிமோட் விமானத்தை வாங்கியதற்கான ரசீதை தமீம் போலீசாரிடம் காண்பித்தார். இதைதொடர்ந்து அவரிடம் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் ரிமோட் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிராவில் அங்குள்ள காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது.