மழை எதிரொலி ! சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் 25-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக இன்று நடைபெற இருந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் டிசம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்.
இந்தச் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் மீண்டும் தேர்தல் வருவதற்கு தலைவி நளினியே காரணம் என்கின்றனர். நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். வேறு வழி இல்லாமல் நளினியும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த தேர்தல் 25-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என துணை தேர்தல் அதிகாரி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.