ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடக்கம்... சென்னையும், கோவையும் பொலிவுறும்
புனே: பொலிவுறு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் நேரந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தில் உள்ள சென்னை, மற்றும் கோவை பொலிவுறும் நகரமாக மாற்றம் பெறவுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நாட்டில் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களை அனைத்து வசதிகளுடன் இருக்கும் நகரமாக மாற்றுவதே ஆகும்.
உலகத் தரம்
அதாவது ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள 'ஸ்மார்ட் சிட்டி' நகரங்களை போல, இந்தியாவில் உள்ள நகரங்களையும் மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டம் பிரதமர் மோடியின் லட்சியமும் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். சுத்தமான குடிநீர், மின்சார வினியோகம், மேடு, நல்ல சாலைகள், அதிவேக, 'இன்டர்நெட்' இணைப்பு, தானியங்கி திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான பொது போக்குவரத்து, கனிணி மயமாக்கப்பட்ட பொதுமக்கள் சேவைகள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்.
100 ஸ்மார்ட் சிட்டிகள் இலக்கு
வரும், 2022-ம் ஆண்டுக்குள், 100 நகரங்களை, ஸ்மார்ட் சிட்டிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு 40 நகரங்களும், 2018-ம் ஆண்டு 40 நகரங்களும் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டிகளில் தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, வேலுார், சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, துாத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய, 12 நகரங்கள் இடம் பெற்றன.
20 ஸ்மார்ட் சிட்டிகள்
முதற்கட்டமாக நாடு முழுவதும் இருந்து 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த பட்டியலில் சென்னை மற்றும் கோவை இடம்பெற்றன. மற்றும் டெல்லி, புவனேஷ்வர் (ஒடிசா), புனே (மகராஷ்ட்ரா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), சூரத் (குஜராத்), கொச்சி (கேரளா), அகமதாபாத் (குஜராத்), ஜபல்பூர் மத்திய பிரதேசம்), விசாகப்பட்டினம் (ஆந்திரா), சோலாப்பூர் (மகராஷ்ட்ரா), தாவணகரே (கர்நாடகம்), இந்தூர் (மத்திய பிரதேசம்), காக்கிநாடா (ஆந்திரா), பெலகாவி (கர்நாடகம்), உதய்ப்பூர் (ராஜஸ்தான்), கவுகாத்தி (அஸ்ஸாம்), லூதியானா (பஞ்சாப்), போபால் (மத்திய பிதேசம்) உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தொடக்க விழா
புனேயில் நேற்று நடைபெற்ற கண்கவர் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி. புனே நகருக்கான 14 திட்டங்கள், பிற 19 நகரங்களுக்கான 69 திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். இந்த திட்டப்பணிகள் ரூ.1,770 கோடி முதலீட்டில் நிறைவேற்றப்படுகிறன்றன. இந்த நிகழ்சியில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, மகராஷ்ட்ராவின் ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், மகராஷ்ட் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை
சென்னையை பொறுத்தவரை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்தால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீர் போல, மழை பெய்யும் சமயங்களில் பேருந்துகளும் தேங்கி நிர்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்து ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகின்றனர். சென்னை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றம் பெறும் சமயத்தில், போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும், அதாவது அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்படும். பகுதிக்கேற்ற வகையில், 1,717 ஏக்கர் பரப்பளவில், மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அனைத்து பொது போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைக்கப்படும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிப்பை தடுக்க வீடியோ கண்காணிப்பு செய்யப்படும். முக்கியமாக வெள்ளம், 'சுனாமி' போன்ற இயற்கை சீற்றங்களை உள்ளடக்கிய நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
கோவை
அனைத்து வசதிகளைம் உள்ளடக்கிய, பாதுகாப்பான, சிறப்பாக நிர்வகிக்கப்படும் நகரமாக கோவை மாற்றம்பெறும்.இயற்கை வளங்களுடன் கூடிய மக்கள் வசிக்கும் நிலப்பரப்பு, 925 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். முக்கியமான, கோவையில் உள்ள நீர்நிலைகளான எட்டு ஏரிகள் புதுப்பிக்கப்படும். 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து சிக்னல்கள், எல்.இ.டி., தெரு விளக்குகள், காற்று மாசுவை கண்காணிக்கும் கருவிகள் போன்றவை பொருத்தப்படும். இந்த வசதிகளெல்லாம் கோவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் போது கிடைக்கும்.