ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி கேமரா.. தனியார் பள்ளியை மிஞ்சும் மாநகராட்சிப் பள்ளி - அசத்தும் வீடியோ
தனியார் பள்ளி என்ன தனியார் பள்ளி.. லட்சம் லட்சமாய் கட்டணம் கேட்கும் பள்ளிகளை மிஞ்சும் வசதிகளைக் கொண்ட மாநகராட்சி பள்ளியின் வீடியோவை காணுங்கள்.
சென்னை: ஏசி வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி கேமரா கண்காணிப்பு என தனியார் பள்ளிகளை மிஞ்சம் மாநகராட்சிப் பள்ளி வட சென்னையில் இயங்கி வருகிறது.
கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நிலைப்பள்ளிதான் இவ்வளவு வசதிகளோடு இயங்கி வருகிறது. பள்ளிச் செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் வண்ண வண்ண மீன்கள் வரவேற்கின்றன.
மாணவர்கள் விளையாடி மகிழ அழகிய தோட்டங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பறவைகளும் வளர்க்கப்படுகின்றன. மாணவர்கள் வேர்க்க வேர்க்க அமர்ந்து பாடம் கற்கும் வகையில் ஃபேன் கூட இல்லாத வகுப்பறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் பள்ளிக் கூடத்தில் ஏசி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் கிளாஸ்
இந்தப் பள்ளிக் கூடத்தில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லக் கூடிய நவின வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு மாணவர்களின் கற்கும் திறன் இதனால் அதிகரித்துள்ளது.
சிசிடிவி கேமரா
பள்ளிக் கூடத்திற்கு வரும் மாணவிகளுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் வகுப்பறையில் சிசிடிவி கேமரா க்கள் பொறுத்தப்பட்டு 24 மணி நேரம் பாதுகாப்பு வளையத்திற்கு பள்ளிக் கூடம் கொண்டு வரப்பட்டுள்ளது.
|
வீடியோ
இந்த மாநகராட்சிப் பள்ளியில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படிக் கூடவா மாநகராட்சிப் பள்ளி செயல்படுகிறது என்று வாய் பிளந்து பலரும் பார்த்து வருகின்றனர்.
சதம் எடுத்து சாதனை
இதுதவிர, இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் இந்தப் பள்ளிக் கூடம் 5வது முறையாக 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சாதனையைப் பாராட்டி சென்னை மாநகராட்சி கல்வி துணை ஆணையர் கோவிந்தராவ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுபாஷ்சந்திரனுக்கும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறனுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.