இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் (கிழிஞ்சு போன ரேஷன் கார்டுக்குப் பதில்) ஸ்மார்ட் கார்டு.. ஓ.பிஎஸ்
சென்னை: இந்த வருட இறுதிக்குள் ரேஷன்கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்படும் என்று தமிழகத்தின் 2016-17ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ரேஷன்கார்டுகளை புதிதாக தராமல் உள்தாள் ஒட்டியே பல வருடங்களை ஓட்டியது அதிமுக அரசு. ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்குவதற்காக புதிய ரேஷன்கார்டுகளை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
குடும்ப அட்டை விவரங்களை கணினியில் இணைப்பது, இணையம் வழியே ரேஷன் கார்டு முகவரி மாற்றம், ரேஷன் கார்டுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைப்பது, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.318.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.