அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் சரத்குமார்.. கறிவேப்பிலையாக பயன்படுத்தியது அதிமுக என காட்டம்!
நாகர்கோவில்: அதிமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து 2 எம்.எல்.ஏக்களுடன் வலம் வந்தார் சரத்குமார். அவர் தென்காசி தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தார். ஆனால் காலப் போக்கில் அவரை ஜெயலலிதா ஒதுக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரை முற்றிலும் கைகழுவி விட்டார் ஜெயலலிதா. இதனால் சரத்குமார் பெரும் அப்செட் ஆனார்.
மேலும் சமீபத்தில் இவரது கட்சியும் உடைந்தது. இன்னொரு எம்.எல்.ஏவான எர்ணாவூர் நாராயணன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். கட்சிப் பிரமுகர்கள் பலரும் கட்சியை விட்டு கூண்டோடு விலகினர்.
இந்த நிலையில், நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகுகிறது. அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை.
அதிமுக என்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது. தேர்தலில் அதிக இடங்கள் அளித்தாலும் சரி இனி அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.