திடீர் பழுது... திருச்சி-துபாய் ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறக்கம்
சென்னை: திருச்சியிலிருந்து 169 பயணிகளுடன் துபாய்க்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் பழுது காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த அத்தனை பேரும் பத்திரமாக இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
169 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அந்த விமானம் இன்று அதிகாலையில் திருச்சியிலிருந்து துபாய்க்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் பழுது ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அப்போது விமானம் சென்ற பகுதிக்கு அருகில் இருந்த சென்னை விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. தக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டதும், விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று பிற்பகலுக்கு மேல் விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.