புலியை முறத்தால் துரத்திய பரம்பரையாச்சே.. பாம்பை துடைப்பத்தால் விரட்டிய புதுவைப் பெண்!
பாம்பை துணிச்சலுடன் போலீஸ் ஒருவர் பிடித்துள்ளார்.
புதுச்சேரி; புலியை முறத்தால் விரட்டிய மறத்தமிழச்சி என கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் பாம்பை துடைப்பத்தாலேயே துடைத்து விரட்ட ஒரு பெண் முயன்ற சம்பவம் புதுச்சேரி விமான நிலையத்தில் நடந்துள்ளது. ஆனால் அனைவரையும் அச்சுறுத்திய அந்த நாகப்பாம்பை போலீஸ்காரர் ஒருவர் பிடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
புதுச்சேரி விமான நிலையத்தின் விஐபிகளின் வரவேற்பறை உள்ளது. நேற்று அந்த வரவேற்பறையில், விமானநிலைய தலைமை அதிகாரி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் நின்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடையே 6 அடி நீளமுள்ள ஒன்று கூர்ந்து சென்றுள்ளது. இதனை கண்டதும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பாம்பை கண்டதும் அனைவரிடம் பயமும் பீதியும் தொற்றிக் கொண்டது.
பின்பு அந்த பாம்பு ஒரு சோபா இருக்கையின் கீழ் சென்றது. அதனை அங்கிருந்தோர் பிடித்து அங்குள்ள தோட்டம் நிறைந்த லவுன்ச் பகுதியில் கொண்டு போய் விட்டனர். அந்த இடத்திலிருந்து மீண்டும் விஐபி அறைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து, விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் யோசித்தார். ஓடிச்சென்று, தரைதுடைக்கும் மாப்பை எடுத்து, நாகப்பாம்பை தள்ளிக்கொண்டே வெளியில் விடலாம் என முயற்சித்தார். ஆனால் முடியவில்லை.
அந்த பாம்பு அங்கிருந்த புதர் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பிறகு போலீஸ்காரர் விரைந்து வந்து அந்த பாம்பை பயமின்றி துணிச்சலாக பிடித்தார். இதனை கண்டு அங்கிருந்தவர் உயரதிகாரிகள் அனைவருமே அதிர்ச்சியில் வாயை பிளந்தனர். பின்னர் அந்த பாம்பை போலீஸ்காரர் வனத்துறையினடம் ஒப்படைத்தார். பாம்பை பிடித்த போலீஸ்காரர் பெயர் தியாகு என்பதாம். இவர் இந்திய ரிசர்வ் பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.
இவரது தைரியத்தை பாராட்டி உடனடியாக பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழையும் புதுச்சேரி டிஜிபி வழங்கினார். பாராட்டுக்கள் போலீஸ்காரருக்கு மட்டும் இல்லை. மாப் துடைப்பத்தை வைத்து பாம்பை தள்ளிக்கொண்டே அப்புறப்படுத்த நினைத்த அந்த பெண்ணுக்கும்தான். நாளை அவரை விமான நிலைய உயரதிகாரிகள் பாராட்டி கவுரவிக்கப்பட உள்ளனராம்.