குடியாத்தம்: நடு ராத்திரியில் அம்பிகாவைக் கடித்த நாகம்.. பாம்புடன் போலீஸைத் தேடி வந்த உறவினர்கள்!
பாம்பு கடித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.
Recommended Video
குடியாத்தம்: குடியாத்தம் அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்ததால், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் பாம்புடன் வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மனைவி அம்பிகா. நேற்றிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது அம்பிகாவை நாகப்பாம்பு கடித்தது. இதனால் அம்பிகா வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் சரியான நேரத்தில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அம்பிகாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அம்பிகாவை கொண்டு சென்றனர். ஆனால் அம்பிகா பரிதாபமாக இறந்து போனார்.
இதனால் ஆத்திரமடைந்த அம்பிகா உறவினர்கள், கடித்த பாம்புடன் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் அந்த புகார் மனுவில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் காலம் தாழ்த்தியதால் அம்பிகா உயிரிழிக்க நேரிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். காவல்நிலையத்திற்கு பாம்புடன் வந்து மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.