சென்னை அரசு பொது மருத்துவமனைக்குப் படையெடுக்கும் பாம்புகள் - அடுத்தடுத்து சிக்கியதால் நோயாளிகள் பீதி
சென்னை: சமீபகாலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர நாள்தோறும், புறநோயாளிகளாக தினமும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
கடந்தாண்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிசு ஒன்றின் சடலத்தை எலி கடித்ததைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் எலி, பூனை மற்றும் நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனபோதும், தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகங்களில் இவற்றின் நடமாட்டம் குறையவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நோயாளிகள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடைந்த சேர், நாற்காலிகள் போன்றவற்றை போட்டு வைத்திருக்கும் அறைகளில் எலிகளைப் பிடிப்பதற்காக தற்போது புதிய வரவாக பாம்புகள் வந்து சேர்ந்துள்ளதாம்.
கடந்த 21ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறை அருகே, ஊழியர்கள் உடைமாற்றும் அறையில் நல்ல பாம்பு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஊழியர்கள் அந்த பாம்பை சடலமாக மீட்டனர்.
இந்நிலையில் சமையல் அறை அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இறந்த நிலையில் இருந்த ஒரு பாம்பை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே பகுதியில் இரண்டு பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால்,வார்டுகளில் உள்ள உள்நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, சமையல் அறை அருகில் உள்ள வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எப்போது பாம்பு வருமோ என்ற அச்சத்திலேயே நிம்மதி இழந்து காணப்படுகின்றனராம்.
யாராவது ஒரு "ஸ்னேக் பாபு"வைப் பிடித்து வந்து மிச்சம் மீதி இருக்கும் பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தினால் நல்லது என்று நோயாளிகள் புலம்புகிறார்கள்.