“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்”... பின்னிப் பிணைந்து பாம்புகள் நடனமாடிய வீடியோ வைரலானது!
குன்னூர் மலைப்பாதையில் இரண்டு சாரைப் பாம்புகள் இணைந்து நடனமாடிய வீடியோக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
நீலகிரி: குன்னூர் மலைப்பாதையில் இரண்டு பாம்புகள் இணைந்து நடனமாடிய காட்சி வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதுண்டு. அவற்றை அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள் நின்று ரசித்து விட்டுச் செல்வர்.
அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நடனமாடியது.
இந்த அரிய காட்சியை அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர். சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
சுற்றிலும் மக்கள் நின்று வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு கொள்ளாமல் இரண்டு பாம்புகளும் சுமார் அரை மணி நேரம் பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது. அப்போது இரண்டு பாம்புகளும் நிலப்பரப்பில் இருந்து சிறிது தூரம் மேலே எழுந்து நின்றது பார்ப்பதற்கு, அவை நிற்பது போல் காணப்பட்டது.
சினிமாவில் மட்டுமே பார்த்த இத்தகைய காட்சியை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த வழியே வாகனத்தில் வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.