"நினைத்தது" நல்லபடியாக நடந்து முடிந்தது.. பாஜக ஹேப்பி!
சென்னை: நினைத்தபடி அதிமுகவின் இரு பிரிவுகளும் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கே ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டதால் பாஜக தரப்பு நிம்மதி அடைந்துள்ளதாம்.
இந்த ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இத்தனை நாட்களாக அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடாமல், அதிமுக அழிந்து விடாமல், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் சிதறிப் போய் விடாமல் கடுமையாக போராடி வந்தது பாஜக.
தற்போது இரு பிரிவு அதிமுகவின் ஆதரவும் உறுதியாகி விட்டதால் பாஜகவின் திட்டத்தின் பெரும்பகுதி நிறைவேறப் போகிறது.
ஜெ. மறைவுக்குப் பின்னர்
ஜெயலலிதா இறந்ததுமே அதிமுக நிர்க்கதியானது (தமிழ்நாட்டு மக்கள் அல்ல). இந்தச் சூழ்நிலையில்தான் பாஜக தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. அதிமுகவிடம் உள்ள மிகப் பெரிய வாக்கு வங்கி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மிக மிக முக்கியம் என்பதால் அப்படியே கொத்தாக அதிமுகவை தன் பக்கம் கொண்டு வர காய்களை நகர்த்தியது.
சீட்டுக்கட்டாக மாறிய அதிமுக
கிட்டத்தட்ட சீட்டுக்கட்டு விளையாட்டு போல மாறியது அதிமுகவின் நிலை. தலைவர்கள் மாற்றம், முதல்வர்கள் மாற்றம், இடை இடையே ரெய்டுகள் என கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து வந்தது. ஆனால் அதிமுக அழியவில்லை, ஆட்சியும் கலையவில்லை. இதுதான் மாஜிக்!
சிந்தாமல் சிதறாமல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஒரு ஓட்டு கூட வீணாகக் கூடாது என்பதே பாஜகவின் பெரும் கவலையாக இருந்தது. அதற்கு அதிமுக ஆட்சி கவிழக் கூடாது. அதேசமயம், அதிமுகவினர் ஒருங்கிணைந்தும் விடக் கூடாது. இப்படி பல விஷயங்களை பாலன்ஸ் செய்து கொண்டிருக்கிறது பாஜக.
இடை இடையே தீபா
இந்த இரண்டு அதிமுகவிலும் தொய்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம் சொல்லி வைத்தாற் போல தீபா வந்து ஏதாவது புதுப் பிரச்சினையைக் கிளப்பி விடுவார். அதிரடி பேட்டி அல்லது அடிதடி ரகளை என அவர் ஒரு டிராமாவைப் போடுவார். பிறகு வீட்டுக்குப் போய் பதுங்கி அமைதியாகி விடுவார்.
கிட்டத்தட்ட கிளைமேக்ஸ்
இப்போது கிட்டத்தட்டி கிளைமேக்ஸ் வந்து விட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி விட்டது. அதிமுகவின் வாக்குகள் முழுமையாக பாஜகவுக்கே போகப் போகிறது. இதைத்தான் பாஜக இதுநாள் வரை எதிர்பார்த்திருந்தது. இப்போது அது நடக்கப் போகிறது.
அப்புறம்!
தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டதாக பொன் ராதாகிருஷ்ணன் வேறு அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தில் காலூன்றிய பரவசத்தில இருக்கிறது பாஜக. தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் என்னென்ன நடக்கலாம் என்பதை ஊகிக்காத தமிழர்களே இருக்க முடியாது!