ஆக மொத்தம் இது ஆஸ்பத்திரியே அல்ல..!
சென்னை: மயில்சாமி ஒரு படத்தில் ஒரு காமெடி செய்திருப்பார்.. அந்தக் காமெடிக்கும் நம்ம ஊர் அரசியலுக்கும் சற்றும் வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு நோயாளி வருவார்.. மயில்சாமிதான் டாக்டர்.. நோயாளியிடம் ஒவ்வொன்றாக கேட்டு கடைசியில் எல்லாம் எனக்கும் இருக்கு.. போய் நல்ல டாக்டராப் பாரு என்று கூறி விட்டு.. ஆக மொத்தம் இது ஆஸ்பத்திரியே அல்ல என்று சவுண்டு விடுவார் மயில்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதேபோல கத்தும் மன நிலையில்தான் நம்ம மக்களும் உள்ளனர்.. ஆக மொத்தம் இது ஆட்சியே அல்ல என்று வார்த்தைகளை மாற்றிப் போட்டு. தலைமைச் செயலாளர் ஞானதேசிகனின் அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் கத்தத் தோன்றும்.
அதான் சொன்னாங்களே
மாபெரும் மழை வரப் போகிறது, பெரும் மழை கொட்டும், 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றெல்லாம் வானிலை மையம் எச்சரிக்கிறது. ஆனால் அரசுத் தரப்பிலோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பார்த்தால் கிட்டத்தட்ட எதுவுமே இல்லை.
அப்படிச் சொல்லலையே
மாறாக, தலைமைச் செயலாளர் என்ன சொல்கிறார்.. மிக மிக பலத்த மழை பெய்யும் என்றுதான் வானிலை மையம் சொன்னது. 50 செமீ மழை பெய்யும் என்று அது சொல்லலையே என்கிறார்...
சொன்னால்தானா!
சொன்னால்தானா.. மிக மிக பலத்த மழை பெய்யும் என்று கூறியதுமே மக்களே சுதாரித்து எதிர்பார்த்துக் காத்திருந்தனரே.. இவ்வளோ பெரிய அரசு நிர்வாகம், அரசு இயந்திரம், முதல்வர், தலைமைச் செயலாளர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் என இத்தனை பேர் உள்ளனரே, சுதாரித்திருக்க வேண்டாமா.. ?
அது எப்படி வித்தியாசம் இல்லாமல் போகும்
செம்பரம்பாக்கம் ஏரியில் முன்கூட்டியே தண்ணீரைக் குறைத்திருந்தால் கூட பெரிய வித்தியாசம் இருந்திருக்காது என்பது ஞானதேசிகனின் இன்னொரு வாதம். இதுவும் ஓட்டைவாதம்தான். தொடர்ந்து மழை பெய்கிறது. ஏரியிலிருந்து முன்கூட்டியே நீரை படிப்படியாக திட்டமிட்டு தொடர்ந்து திறந்து வந்திருந்தால் நிச்சயம் ஓரளவு சேதத்தைத் தடுத்திருக்கலாம்.
புத்திசாலித்தனமாக இருந்திருந்தால்
அதை விட புத்திசாலித்தனமாக இருந்திருந்தால், மழைக்காலத்திற்கு முன்பே ஏரியை தூர் வாரியிருக்கலாம்.. ஆக்கிரமிப்புகளைக் காலி செய்திருக்கலாம்.. ஏதாவது செய்திருக்கலாம்.. மக்கள் பாவம் இல்லையா?
விதியெல்லாம் பார்த்தா எல்லாம் நடக்கிறது!
வெள்ளக்கட்டுப்பாட்டு விதியின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பானது, 2 அடி குறைவாக அதாவது 22.05 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டதாக ஞானதேசிகன் கூறுகிறார். அதுதான் வரலாறு காணாத மழையாக பெய்து வந்ததே.. இப்போது போய் விதியைக் கடைப்பிடிக்கலாமா.. "நம்ம" ஆட்சியில் எல்லா விஷயத்திலும் விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்கிறோமா... இதில் மட்டும் ஏன் இவ்வளோ "ஸ்டிரிக்ட்"?
நாசமாப் போனது நாம்தானே
மழையைக் கணிக்கும் வேலை எங்களுடையது இல்லை என்று நாசாவே சொல்லிருச்சே என்று ரொம்ப கூலாக கூறி விளக்கம் அளிக்கலாமா.. நாசாவுக்கு என்ன.. நாசமாப் போனது நாம்தானே.. நம் மக்கள்தானே.. அவர்களைக் காக்க உயிரைக் கொடுத்து பணியாற்றியிருக்க வேண்டாமா?
உதவியிருக்க வேண்டாமா
பொதுப்பணித்துறையினர் தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தனர், செய்து வந்தனர்.. என்று கூறுவதோடு தலைமைச் செயலாளர் பணி முடிந்து விட்டதா. அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தாரா.. அவர்களுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தாரா.. அவர்களுக்கு உதவியாக இருந்தாரா என்பதையும் தலைமைச் செயலாளர் விளக்கியிருக்கலாம்.
அது சரி
தலைமைச் செயலாளரின் அறிக்கை ரொம்பவே கண்டிப்பாக உள்ளது. நாங்கள் எல்லாவற்றையும் பின்பற்றினோம். வெள்ளம் வந்து விட்டது.. அதற்கு நாங்கள் என்ன பண்ண முடியும் என்று கேட்பது போல உள்ளது.
தலைமைச் செயலாளர் கூறுவதைப் பார்த்தால் தவறு எல்லாம் மழை மற்றும் வெள்ளத்தின் மீதுதான். எங்களிடம் இல்லை என்பது போல உள்ளதே!