அப்போ அது ஏஐ இல்லையா? இரவோடு இரவாக டிடிவி தினகரன் உடைத்த பர்னிச்சர்! இருந்த ஒரு எம்எல்ஏவும் போச்சு
சென்னை: அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானதும் இரவோடு இரவாக ஆளுநரிடம் புகார் அளித்தார் டிடிவி தினகரன். இதற்கு தவெக சார்பில் காமராஜ் கையெழுத்திட்டது போல் வெளியிடப்பட்ட வீடியோவை, "ஏஐ என்றும் காமராஜ் தன்னுடனே இருப்பதாகவும் கூறி விஜய்யை கடுமையாக விமர்சித்து இருந்தார். டிடிவி தினகரன் இப்படி ஆக்ரோஷமாக பேச, சத்தமில்லாமல் சம்பவம் செய்துவிட்டார் எம்.எல்.ஏ காமராஜ்.. ஆளுநரிடம் புகாரளித்த டிடிவி தினகரன் அன்றைய தினம் கூறிய தகவலையும் இன்று நடந்த தலைகீழ் மாற்றம் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அந்தக் கட்சிக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே கிடைத்தது. மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் மட்டுமே வெற்றி பெற்றார்.

இரவோடு இரவாக ஆளுநரிடம் புகார்
இது ஒருபுறம் இருக்க பெரும்பான்மை கிடைக்காத விஜய்யோ, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடந்த 5 ஆம் தேதி முதல் அலைந்து கொண்டிருந்தார். மொத்தமாக 4 முறை ஆளுநரை சந்தித்த நிலையில், 3வது முறையாக ஆளுநரை சந்தித்த போது விஜய் தரப்பு விசிக, ஐயூஎம் எல் ஆதரவளிக்காத நிலையில், காங்கிரஸ் 5, சிபிஎம் 2, சிபிஐ 2 மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கட்சியின் ஆதரவு கடிதம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட டிடிவி தினகரன் இரவோடு இரவாக ஆளுநரிடம் குதிரை பேரம் நடப்பதாக புகார் அளித்தார். அதுமட்டுமின்றி தவெகவிற்கு ஆதரவு அளித்ததாக சொல்லப்பட்ட காமராஜையும் கையோடு ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வந்தார் டிடிவி தினகரன். தவெகவிற்கு ஆதரவாக கையெழுத்திட்டது தனது எம்.எல்.ஏவே இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.
ஏஐ வீடியோ என்று சமாளித்தார்

செய்தியாளர்கள் காமராஜ் கையெழுத்திடுவது போல பரவும் வீடியோ பற்றி கேட்ட போது, அது ஏஐ வீடியோ என்று சமாளித்தார். ஆனால் இன்று சட்டசபையில் டிடிவி தினகரன் கட்சி எம்.எல்.ஏ காமராஜ், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். இது டிடிவி தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், உடனடியாக அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.
காமராஜ் கையெழுத்திட்ட வீடியோவை ஏஐ என்று விமர்சித்த டிடிவி தினகரனுக்கு மொத்தமாக அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் காமராஜ்.
இதனால், ஆளுநரிடம் பொய் புகார் பட்டியல் அளித்ததோடு, கிண்டி காவல் நிலையத்திலும் டிடிவி தினகரன் விஜய் மீது புகாரளித்தார். விஜய்யை மிக கடுமையாக விமர்சித்தும் பேட்டி கொடுத்திருந்தார்.
கொந்தளித்த டிடிவி தினகரன்
"எங்களது காமராஜ் எம்.எல்.ஏ பெயரில் விஜய் கொடுத்த ஆதரவு கடிதம் போலியானது. இந்த தகவலை ஆளுநரிடம் தெரிவித்து விட்டேன். எங்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த த.வெ.க முயற்சிக்கிறது. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடுவது போன்ற கடிதத்தை வீடியோ எடுத்தது யார் என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும். விஜய்க்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் அளித்த ஆதரவு கடிதத்தின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்" என்றெல்லாம் டிடிவி தினகரன் கொந்தளிக்க, பக்கத்தில் நின்ற காமராஜும் ஆமோதித்தார்.
தலைகீழாக மாறிய சம்பவம்
ஆனால் இன்று சட்டசபையில் நடந்தது எல்லாம் தலைகீழ் மாற்றமாக மாறிவிட்டது. தவெக ஆட்சிக்கு தனது முழு ஆதரவு என்று காமராஜ் அறிவித்தது டிடிவி தினகரனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துவிட்டது. "காமராஜ் கையெழுத்திடவே இல்லை.. அது ஏஐ வீடியோ" என்றெல்லாம் பேசிய டிடிவி தினகரன், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற கேள்வி ஒரு தரப்பிலும், "குதிரை பேரம் உண்மையிலேயே நடந்திருக்கிறதா?" என்ற கேள்வி இன்னொரு தரப்பிலும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.














Click it and Unblock the Notifications