ஃபேஸ்புக்கில் ஆபாசமாக பேசும் நித்தியானந்தா சிஷ்யைகள்.. கர்நாடக போலீஸுக்கு கடிதம்!
சமூகவலைதளங்களில் சிறுமிகள் மூலம் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சிக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடக போலீஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை: சமூகவலைதளங்களில் சிறுமிகள் மூலம் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சிக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடக போலீஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி ராஜபாளைத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் கவிஞர் வைரமுத்துவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. காவல்நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
ஓயாத வைரமுத்து சர்ச்சை
ஆனால் வைரமுத்து கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்ற சென்னை ஹைகோர்ட் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் வைரமுத்து மீதான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
ஆபாசமாக விமர்சிக்கும் நித்தி குரூப்
வைரமுத்து குறித்து நித்தியானந்தாவின் சிஷ்யைகள் என கூறிக்கொள்ளும் சிறுமிகள் ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து அவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் தரக்குறைவான வார்த்கைளுடன் கூடிய வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக போலீசாருக்கு கடிதம்
இந்நிலையில் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடகா மாநில போலீசாருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தனிநபர் மீது தாக்குதல்
மேலும் சந்நியாசிகள் எனக் கூறிக்கொண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளின் வீடியோ பேச்சு அடங்கிய பேஸ்புக் பக்கத்தையும் அவர் ஆதாரமாக இணைத்துள்ளார். தனிநபர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தாக்கி பேசுகின்றனர் என்றும் பியூஷ் மானுஷ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அமைதியை குலைக்க முயற்சி
மேலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகப் பேசி மக்களிடையே அமைதியைக் குலைக்க நித்யானந்தா ஆசிரமம் முயல்கிறது என்றும அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே நித்தியானந்தா ஆசிரமத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூஷ் மானுஷ் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.