ரூ.30 ஆயிரம் கோடி சொத்துக்களும் என்னவாகும்?- பறிபோகும் பி.டி.லீ. நாயக்கர் அறக்கட்டளை சொத்துக்கள்?
பி.டி.லீ. நாயக்கர் அறக்கட்டளை சொத்துக்கள் பறிபோகும் அபாயம் என கூறப்படுகிறது.
சென்னை: பி.டி.லீ. செங்கல்வராயநாயக்கர் எழுதிய உயிலின்படி அவரது சொத்துக்கள் பராமரிக்கப்படவில்லை. இதன்மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடங்கியுள்ளன' என்கின்றனர் சமூக அமைப்பின் நிர்வாகிகள்.
அகில பாரத சத்திரியர் மகா சபையின் தலைவர் சி.ஆர்.ராஜன், பா.ம.கவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தவர். சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்துறை பொறியாளர்கள் அமைப்பின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
இவர் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் கடந்த 4.9.1870 ஆம் ஆண்டு ஓர் உயில் எழுதினார்.
அதில் தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் ஓர் அறக்கட்டளையாக உருவாக்கினார். பிறகு முதல் உயிலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி 30.4.1872 ஆம் ஆண்டு ஒரு திருத்த உயிலை எழுதி 9.5.1873 அன்று பதிவு செய்தார். அவரது உயிலின்படி அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு இன்றைய மதிப்பீட்டின்படி சுமார் 30 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும்.
அவரது இரண்டாவது உயிலின்படி அறக்கட்டளையினை பச்சையப்பன் அறக்கட்டளையில் உள்ள படித்த நிர்வாகிகளைக் கொண்டு செயல்பட வேண்டும். அதிலும், படித்த வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதுநாள் வரையில் அப்படி யாரும் நியமிக்கப்படவில்லை.
இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 1986 ஆம் ஆண்டு (C.S 242) வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் தீர்ப்பு 10.9.1997 ஆண்டு வெளியிடப்பட்டு 1.4.1999 அன்று அமல்படுத்தப்பட்டது.
1997 முதல் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றம் 9 அறங்காவலர்களைக் கொண்ட குழுவினை மூன்று வருட காலத்துக்கு நியமனம் செய்கின்றது.
அவரது உயிலின்படி சென்னை மாவட்டத்தில் 13 அசையா சொத்துக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 அசையா சொத்துக்களும் மற்றும் பெங்களூர், கொச்சின், மதுரை ஆகிய இடங்களிலும் அசையா சொத்துக்கள் உள்ளது. அவரது உயிலின்படி தொழிற்பயிற்சிபள்ளி (Polytechnic) விரிவாக்கம் செய்யப்படவில்லை.
அனாதை மற்றும் ஆதரவற்றோர் பள்ளி நடக்கவில்லை. மாணவர்களுக்கும் உதவித்தொகை தரப்படுவதில்லை. ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை நடைபெறுவதில்லை. அவரது இரண்டாவது உயிலின்படி எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த 21 ஆண்டுகளாக அறக்கட்டளை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் இல்லை.
வரவு செலவு கணக்கு இல்லை. ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்படவில்லை. பச்சையப்பன் அறக்கட்டளையால் விற்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்படவில்லை. உதாரணத்துக்கு சென்னையில் பைலட் தியேட்டர் பச்சையப்பன் அறக்கட்டளையினால் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை முடிந்து இன்றும் அதனை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் பைலட் தியேட்டர் பின்புறம் 11.5 கிரவுண்ட் இடம், தனியார் ஆக்கிரப்பில் உள்ளது. இதற்கு முன்னாள் அறங்காவலர்கள் சிலரும் உடந்தையாக இருந்து வசூல் செய்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி, வேலைவாய்ப்புகள் கிடைக்காது. பி.டீ.லீ. செங்கல்வராயநாயகர் அறக்கட்டளையை, முறையாக நடத்தினால் வட தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுய தொழிலுக்கு வழிகாட்டு மையங்கள் ஆகியவற்றை உருவாக்கி விரிவாக்கம் செய்யலாம். பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் எழுதிய உயிலின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு" என குறிப்பிட்டுள்ளார்.