மெரினாவில் வெடித்த இளைஞர் புரட்சி... உலக எழுச்சியாக மாற உதவிய மீம்ஸ், ட்ரால் கிரியேட்டர்கள்!
இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் எழுச்சிப் போராட்டமாக மாற முக்கிய பங்காற்றியது சமூக வலைதளங்கள்.
Recommended Video
சென்னை : மீம்ஸ், ட்ரால்கள், முகநூலில் நேரலை, வாட்ஸ் அப் வைரல் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் பிள்ளையார்சுழி போட்ட போராட்டம் என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம் தான். இளைஞர்கள் ஒன்று திரண்டு தன்னெழுச்சியாக நடத்திய இந்த போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்தவை சமூக வலைதளங்களே. ஒரு மீடியத்தை சரியான முறையில் பயன்படுத்திய போராட்டம் என்ற பெருமைக்கு இந்த ஜல்லிக்கட்டு போராட்டமே சிறந்த உதாரணம்.
'வேண்டும், வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்' சென்னை மெரினாவில் சிறிய போராட்டமாகத் தொடங்கியது, தமிழகம் முழுவதும் பரவி உலகெங்கும் ஒலித்தது. இரவு பகல் பாராமல், பனி, வெயில் என்று ஓடி ஒளியாமல் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் தமிழர்கள், இது எங்கள் பாரம்பரிய விளையாட்டு இதற்கு தடை கூடாது என்று போராட்ட களமிறங்கினர் மாணவர்கள்.
அரசும், அதிகாரிகளும் எதிர்பார்த்திராத வகையில் சிறு சிறு குழுக்களாகக் கூடியவர்கள் மெரினாவில் கடல் அலைகள் தெரியாமல் மனிதத் தலைகளாகவே தெரியும் அளவிற்கு தங்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி அனைவரையும் திணறடித்தவிட்டனர். இளைஞர்களுக்கு ஆதரவாக ஜாதி, மதம், இனம், மொழி என்று பாராமல் அவர்களுக்கு பக்க பலமாக கைக்குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டக் களம் கண்டனர்.
பிரபலமாக பேசப்பட்ட போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப் பிரபலமாக பேசப்படுவதற்கான முக்கிய காரணம் அத்தனை இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றாலும் ஒரு வரன்முறையோடு கட்டுக்கோப்பாக, ஒழுக்கமான முறையில் அது நடந்தது தான். யாருக்கும் இடையூறு இல்லாமல், தங்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வந்தவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களை கண்ணும் கருத்துமாக தங்களின் குடும்ப உறுப்பினர்கள் போல பார்த்துக் கொண்டனர் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டமும் சமூக வலைதளங்களும்
ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள். மீம்ஸ், ட்ரால்கள் என அனைத்தும் பிரபலமானது இந்த போராட்டத்தின் போது தான். பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை மிஞ்சம் வகையில், புகைப்படங்கள் அதற்கு ஏற்ற ஒப்புமை தலைப்பு என்று எழுச்சியை ஏற்படுத்திய போராட்டத்தை வேர் பரப்பின சமூக வலைதளங்கள்.
சரியாக பயன்படுத்தப்பட்ட மீடியம்
மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், போராட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு சரியான பதிலடி என சமூக வலைதளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான். இளைஞர்களின் எழுச்சி போராட்டம் இன உணர்வு போராட்டமாக மாறியதால் கடல் கடந்து வாழும் தமிழகர்களும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருகிய ஆதரவு
சென்னை மெரினாவில் வந்து போராட்டத்தில் பங்கேற்க மனம் துடித்தாலும் முடியவில்லை என்பதால் தாங்கள் இருக்கும் நாட்டிலேயே ஜல்லிக்கட்டு ஆதரவு பேனர்களை பிடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழர்கள். அந்த போராட்டங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் ஒருமித்த ஆதரவை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு மீடியமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டன.