கோவையில் மோடிக்கு கருப்புக் கொடி… 300க்கும் மேற்பட்டோர் கைது
ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்த பிரதமர் மோடிக்கு தபெதிக, விவசாயிகள் சங்கம், சிபிஐ, விசிக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
கோவை: 112 அடி சிவன் சிலையை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். மோசடி பேர்வழியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்ச்சி வரக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், விசிக, விவசாயிகள் அமைப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் கருப்புக் கொடி போராட்டத்தை கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தினார்கள்.
ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் 112 அடி உயரத்தில் சிவன் சிலை திறக்க திட்டமிடப்பட்டது. அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் செஞ்சிலுவை சங்கத்தின் அருகில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் இந்த கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக, தமாகா, சிபிஐ, விசிக, விவசாயி அமைக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ஆதிவாசி இடங்களை அபகரித்து ஏமாற்றி வரும் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சி பிரதமர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மோடியே திரும்பி போ
"சாகும் விவசாயிகளை பார்க்காமல் வனத்தை அழிக்கும் ஜக்குக்கு துணை போகும் மோடியே திரும்பிப் போ" "காவிரி மேலாண்மை அமைக்காத மோடியே திரும்பிப் போ" "யானை வழித்தடங்களை ஆக்கிரமித்த ஜக்கிக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கிறோம்" உள்ளிட்ட பேனர்களை ஏந்தி போராட்டக்காரர்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
பெண்கள் எதிர்ப்பு
கையில் கருப்புக் கொடி ஏந்தி ஏராளமான பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைக் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெண்கள் "மோடியே திரும்பிப் போ" என்ற எதிர்ப்புக் கோஷங்களை முழங்கினர்.
விவசாயிகள் எதிர்ப்பு
மோடி கோவைக்கு வருவதை எதிர்த்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் அமைத்த ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து விவசாயிகள் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது. இதில் பி. ஆர். பாண்டியன் கலந்து கொண்டு ஜக்கி வாசுதேவ் குறித்து அவரது மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசினார்.
300 பேர் கைது
காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை போன்ற தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சனைக்கெல்லாம் தமிழகம் வராத மோடி, இதற்கு மட்டும் ஏன் வர வேண்டும் என்று முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினார்கள். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.