ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை.. மினிஸ்டர் சரோஜா எப்படி உளறிக் கொட்றாங்க பாருங்க!
ஜெயலலிதா அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவருக்கு ஏற்பட்ட நோய் குறித்து ஒரு டாக்டராக இருக்கும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா எப்படி உளறி கொட்டுகிறார்கள் பாருங்கள்..
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை குறித்த கேள்விகளுக்கு டாக்டர் சரோஜா டான் டான்னு பதில் தருவதை படியுங்கள்..
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஓபிஎஸ் அணியினர் எழுப்பி வர, அதிர்ந்து போன சசிகலா தரப்பு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் அப்பல்லோ டாக்டர் செய்தியாளர் சந்திப்பு, எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அறிக்கை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை என அடுத்தடுத்து மக்களுக்கு உண்மை தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உண்மையை தெரிவிக்கின்றார்களோ இல்லையோ மேலும் மேலும் பல சந்தேகங்கள் அவர்கள் வெளியிடும் அறிக்கையில் இருந்து கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
இவர்கள் எல்லாம் கொடுத்த விளக்கம் போதாதென்று செய்தியாளர் சந்திப்பில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஜெயலலிதாவிற்கு இருந்த நோய் குறித்தும் மருத்துவம் குறித்தும் எப்படி உளறி கொட்டி இருக்கிறார் என்பதை பாருங்கள்..
நானே டாக்டர்
"நான் ஒரு டாக்டர். மகப்பேறு மருத்துவர். அரசுப் பணியாக சவுதி அரேபியாவிற்கு சென்று பணியாற்றினேன். 1991ம் ஆண்டு அம்மாவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டேன்" என்று தன்னைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லிவிட்டு, குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் தருணத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசத் தொடங்கினார் சரோஜா.
எக்ஸ் க்ரோமோசோம்ன்னா என்ன?
பின்னர், எக்ஸ் க்ரோமோசோம்ஸ் மற்றும் ஓய் க்ரோமோசோம்கள் பற்றி வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். இது எந்த அளவிற்கு ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைக்கு தொடர்பு என்றே தெரியவில்லை என்று அங்கிருந்த செய்தியாளர்கள் புலம்பத் தொடங்கினார்கள். மேலும், ஜெயலலிதா 68 வயது நிரம்பியவர். உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின் இறந்துவிட்டார். இதுக்கும் மாதவிடாய் நின்று போனதற்கும் என்ன சம்பந்தம்? இதுகுறித்து எந்தவிதமான குறிப்பும் ஜெயலலிதா மருத்துவ அறிக்கையில் இல்லை என்ற நிலையில் ஏன் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதே தெரியவில்லை என செய்தியாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
கேள்வி நேரம்
ஒருவழியாக கேள்வி நேரம் வந்தது. செய்தியாளர்கள் கேட்க கேள்வி மற்றும் சமூகத் துறை அமைச்சர் சரோஜா அளித்த பதில் இதோ..
ஜெ.விற்கு சிகிச்சை அளித்தது யார்?
கேள்வி: உயர் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு ஸ்டிராய்டு வழங்கக் கூடாது எனும் போது, ஜெயலலிதாவிற்கு இதனை வழங்க பரிந்துரை செய்த மருத்துவர்கள் யார்? அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் யார்?
சரோஜா: மதிப்பிற்குரிய அம்மாவிற்கு சிகிச்சை அளித்தவர்கள் தனி மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் குழுதான் சிகிச்சை அளித்தது.
போயஸ்கார்டனில் சிகிக்சை பற்றி?
கேள்வி: அப்பல்லோ மருத்துவமனையில் அளித்த சிகிச்சைப் பற்றி கேட்கவில்லை. போயஸ் கார்டனில் அவருக்கு யார் சிகிச்சை அளித்தது?
பதில்: தனி மருத்துவர்கள் என்றால் அது ஒருங்கிணைந்த சிகிச்சைதான். முதலில் தனித்தனியாகத்தான் டாக்டர்கள் அவரைப் பார்த்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து, எப்போது, என்ன சிகிச்சை வேண்டும், என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள். யாரும், தனி டாக்டர்கள் இல்லை.
7 நாட்கள் சிறுநீர் தொற்று
கேள்வி: நீங்கள் அப்பல்லோவில் என்ன நடந்தது என்பது பற்றி சொல்கின்றீர்கள். நாங்கள் கேட்பது போயஸ் கார்டனில் நடந்தது பற்றி.. ஜெயலலிதா டிஸ்ஜார்ஜ் அறிக்கைப்படி, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேருவதற்கு முன்பே 5 முதல் 7 நாட்கள் வரை சிறுநீர் தொற்று இருந்துள்ளது. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் சிறுநீர் தொற்று பற்றி நன்றாக தெரியும். பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் இது ஒரு சாதாரண தொற்றுதான். 2 நாட்களில் இதனை குணப்படுத்திவிட முடியும். எதனால் ஜெயலலிதா, 5 முதல் 7 நாட்கள் வரை இந்த தொற்றாலும் காய்ச்சாலும் பாதிக்கப்பட்டார்?
பதில்: இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரக தமனி வழியாக ரத்தம் சிறுநீரகங்களுக்கு செல்கின்றன. அவருக்கு 69 வயதாகிவிட்டது. 10 வயது சிறுமிக்கும் 25 வயது பெண்ணிற்கு ஒரே செயல் திறனிலா சிறுநீரகங்கள் வேலை செய்யும்? சிறுநீரகங்கள் இரண்டு பாகங்களாக இருக்கின்றன. ஒரு பாகம் சிறுநீரைப் பிரிக்கிறது. மற்றொரு பாகம் தேவையற்றதை உறிந்து வெளியே தள்ளும். அம்மாவிற்கு 69 வயது. அதுவும் ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோய் வேறு. மேலும், அவருடைய ரத்த நரம்புகள் மிகவும் சுருங்கிவிட்டது. அதனால் சிறுநீரகங்களுக்கு ரத்தம் செல்வது குறைந்துவிட்டது.
எப்படி செயல்பட்டது சிறுநீரகம்?
சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்தம் குறையும் போது புரோதச் சத்துக்கள் வெளியேற்றப்படுகிறது. அவருக்கு சர்க்கைரை நோய் வேறு இருப்பதால் இது தொற்றுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. சிறுநீர் தொற்று பெண்களுக்கு பொதுவானது என்று நீங்கள் சொன்னது சரிதான். பெண்களுக்கு சிறுநீரை வெளியேற்றும் குழாய் 4மிமீ அளவே கொண்ட சிறியது.
தாலிக்கு தங்கம்
2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி தாலிக்கு தங்கம் திட்டத்தை அம்மா அறிவித்திருந்ததை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு உலகத் தலைவர். அவர் ஒரு வாரம் உடல் நலமில்லாமல் இருந்தார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அவருக்கு சிறுநீர் தொற்று இருந்ததாக சொன்னீர்கள். இது ஓர் இரவில் அவருக்கு வந்திருக்காது. அப்புறம் இதனை 2 நாட்களில் சிகிச்சை அளிக்க முடியாது. நிறைய இருக்கு, 10 வயது சிறுமியானாலும் 24 வயது பெண்ணாலும் சிகிச்சை தொடர்ச்சியாக அளிக்க வேண்டும். சிறுநீர் தொற்றுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கவில்லை என்றால் 10 வயதோ 25 வயதோ கட்டுப்படுத்த முடியாது.
தொடர்ச்சியற்ற சிகிச்சை
கேள்வி: அப்படி என்றால் ஜெயலலிதாவிற்கு தொடர்ச்சியற்ற சிகிச்சை அளிக்கப்பட்டதாக நீங்கள் சொல்கின்றீர்களா?
பதில்: இல்லை. இல்லை.
அவதிக்கு காரணம்?
கேள்வி: ஏனென்றால் அப்பல்லோவிற்கு வந்த 2 நாட்களில் சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் தீர்ந்தது. அப்பல்லோவில் 2 நாட்கள்தான் சிறுநீர் தொற்றுக்கு மருத்துவம் பார்த்தார்கள். ஆனால் போயஸ் கார்டனில் 7 நாட்கள் ஜெயலலிதா அவதிப்பட்டுள்ளார்?
பதில்: அப்பல்லோவில் அம்மா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு அங்கு அனைத்துவிதமான சிகிச்சைகளும் உடனடியாக வழங்கப்பட்டன. அப்பல்லோ மருத்துவமனை காய்ச்சலுக்கும் போதிய சிகிச்சை அளித்தது. அங்கு சரியான நேரத்தில் அனைத்துவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. காய்ச்சல் உடனடியாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் அதிகமாகிவிடும். அதனால் சிறுநீர் தொற்று 24 மணி நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் முன்பு அப்படி செய்யவில்லை. ஆம். அப்பல்லோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் அப்பல்லோவில் மற்ற சிஸ்டம் பாதிக்காதிக்காமல் இருக்க தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டன.
ஜெ. உடல் நலத்தோடு…
கேள்வி: நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜெயலலிதா லேசான உயர் சர்க்கரை, லேசான உயர் ரத்த அழுத்தம், மூச்சுவிட முடியாமல் மயக்க நிலையில் சாதாரணமாகத்தான் அப்பல்லோவிற்கு வந்திருக்கிறார். அதுவும் சின்ன பிரச்சனைக்காகத்தான் மருத்துவமனை வந்திருக்கிறார். தொடக்க நிலை பரிசோதனைகளில் அவரது சிறுநீரகம், நுரையீரல், இதயம், என எல்லா உறுப்புளும் நன்றாக இருந்தது. ஆனால் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில்தான் அவருக்கு நிமோனியா வந்திருக்கிறது. அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்?
பதில்: ஹைபோஸ்டாடிக் நிமோனியா பற்றி உங்களுக்கு தெரியுமா? நீண்ட காலம் படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு நுரையீரல் ஒரு வித சுரப்பிகளை வெளியே தள்ளும். அது நீக்கப்படாவிட்டால் தொற்றுக்கு வழிவகுக்கும். மறுபடியும் நான் சொல்கிறேன் நுரையீரலை மட்டும் பார்க்காதீர்கள். ஹைப்பர் டென்ஷன், இதயக் கோளாறு, சர்க்கரை இது போன்ற பல பிரச்சனை ஒன்று சேர்ந்த சிக்கல் இது. இதெல்லாம் ஒன்று சேர்ந்த பிரச்சனையாக இருக்கும் போது, அதை நாம் ஒரு தனித்தனி பிரச்சனையாக பார்க்கக் கூடாது.
எக்மோவை அகற்றியது யார்?
கேள்வி: கடைசியாக உங்களிடம் ஒரு கேள்வி. ஜெயலலிதா டிஸ்ஜார்ஜ் அறிக்கையில் எக்மோவை குடும்ப உறுப்பினர் முடிவின்படி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினராக வி.கே. சசிகலா பெயர் உள்ளது. அவர் ரத்த உறவு இல்லாத போது இதற்கு எப்படி அனுமதி பெறப்பட்டது?
பதில்: இந்த முடிவை எடுத்தது, தமிழக அரசின் கண்காணிப்பில் உள்ள மருத்துவர்கள் குழு. அந்த முடிவு எடுக்கப்படும் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். ஏன் அந்த முடிவு எடுக்கப்பட்டது? மற்றும் இதுதொடர்பான உண்மையான ரகசியங்கள் எல்லாம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே தெரியும்.