சென்னையில் அதிவேகமாக வந்த ஜீப் மோதி பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் பலி
சென்னையில் ஜீப் மோதியதில் பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: மதுரவாயல் சாலை அருகே கால் டாக்சிக்காக காத்திருந்த பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர் மீது ஜீப் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, போரூரைச் சேர்ந்தவர் ரஷ்மி (24). சாப்ட்வேர் என்ஜினியர். பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்ப்பதற்காக மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தார். நண்பரை சந்தித்த பின்னர் வீடு திரும்ப கால் டாக்சியை அழைத்துள்ளார்.
கால் டாக்சிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஜீப் ஒன்று அவர் மீது மோதியது. இதில் ரஷ்மீ தூக்கி வீசப்பட்டார். படுகாயத்துடன் சாலையில் விழுந்தார்.
அவர் மீது ஜீப்பை மோதிய ஆசாமி ஜீப்பை நிறுத்தாமல் சென்றுவிட்டார். படுகாயத்துடன் கிடந்த ரஷ்மியை மீட்ட அருகில் உள்ள பொதுமக்கள் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.