விபத்தில் சிக்கி மூளைச்சாவு – சென்னையில் மென்பொறியாளரின் உறுப்புகள் தானம்!
சென்னை: சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மென்பொறியாளர் ஒருவரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பட்சிராஜன் என்ற பாலாஜி. இவர் சென்னை குரோம்பேட்டை நேரு நகர் பகுதியில் தங்கியிருந்து, டிசிஎஸ்சில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த 7 ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பல்லாவரம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பட்சிராஜன் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி அவருடைய இருதயம் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் அப்பலோ மருத்துவமனைக்கும், கண்கள் சங்கர நேத்ராலயாவிற்கும், சிறுநீரகங்களில் ஒன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று வேலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
பட்சிராஜன் உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள். பட்சிராஜனுக்கு ஜனனி என்ற 8 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.