இன்று சுவாதி கொலையான நாள்.. இன்னும் பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் குமுறல்
மென்பொறியாளர் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை நுங்கம்பாக்கம் ரயிஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என பெண் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மென்மொறியாளர் சுவாதி , கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் நடைபெற்ற கொலையால் சென்னை மாநகரே நடுங்கி போனது. குறிப்பாக இளம்பெண்கள் பெரும் பீதியடைந்தனர்.
இதையடுத்து பாதுகாப்புக்காக ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூட இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பகல் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் பெண் போலீஸ்கள் இருப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாலை 6 மணிக்குப் பிறகும் பெண் போலீஸ்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ரயில்களிலும் பெண்களுக்கான பெட்டிகளில் மதுபோதையில் சில ஆண்கள் ஏறுவதாக குற்றம்சாட்டியுள்ள பயணிகள் இதனை தடுக்க ரயில் பெட்டிகளிலும் பெண் போஸீசாரை அமர்த்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் சுவாதி படுகொலை போன்று மேலும் ஒரு கொலை நடக்காமல் தவிர்க்கலாம் என்றும் பயணிகள் தெரிவத்துள்ளனர். இனியாவது கேமராக்கள் பொருத்தப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..