வருகிறது என் சுயசரிதை.. தமிழில்.. அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்.. சரிதா நாயர்!
கோவை: தன்னுடைய சுயசரிதை புத்தகம் விரைவில் வெளிவர இருப்பதாகவும், அதில் தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும் என சோலார் பேனல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியில் செயல்பட்டு வந்த சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்படு வந்தனர் சரிதா நாயரும், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனும்.
கடந்த 2009-ம் ஆண்டு இவர்கள் மீது காற்றாலை மற்றும் சோலார் பேனல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் (எண்-6) நடந்து வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்டில் சரிதா நாயர் மட்டும் ஆஜரானார். ஆனால், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, வழக்கை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சரிதா நாயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோலார் பேனல் வழக்கில் 90 சதவீத ஆவணங்களை இதற்கென அமைக்கப்பட்ட கமிஷனிடம் ஒப்படைத்து விட்டேன். அந்த கமிஷன் தான் அறிவிக்கும். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும் சமர்ப்பித்துள்ளனர்.
எனக்கு உடல்ரீதியாக எந்த அச்சுறுத்தலும் வரவில்லை. ஆனால் மனரீதியாக அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது.
கேரளாவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, இந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். விசாரணை முடிவில் என் மீது குற்றமில்லை என ஆதாரத்துடன் நிருபிப்பேன்.
என்னுடைய சுய சரிதை புத்தகத்தை தமிழில் எழுத என்னிடம் கேட்டார்கள். அந்த புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. இதில் எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும்" எனத் தெரிவித்தார்.