சூரிய புயல்... சில நிமிடங்கள் செயலிழந்த செயற்கைக் கோள்... தடங்கலுக்கு வருந்திய டிவி
சென்னை: கடந்த 3 தினங்களாகவே பிற்பகல் 12.30 மணியளவில் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடங்கலுக்கு டிடிஹெச் நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றன.
மழையோ, தூறலோ விழுந்தால்தான் டிவி சிக்னல் கிடைக்காமல் போகும். இது என்ன வெயில் கொளுத்தும் போதும் டிவி ஒளிபரப்பு கட் ஆகிறதே என்று யோசித்தால் இது சூரியப்புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாக செயற்கைகோள்கள், பூமியிலிருந்து 22,300 மைல் தொலைவில் பூமத்திய ரேகைக்கு நிலைநிறுத்தப்படுகின்றன. பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், சூரியன் - செயற்கைகோள்கள் - பூமியில் உள்ள செயற்கைகோள் தகவல்களை பெறும் நிலையங்கள் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. இதனால் செயற்கைகோள்கள் செயலிழக்கின்றன.
செயற்கை கோள்கள் செயழிக்க காரணம், பூமியில் உள்ள தகவல்களை பெறும் நிலையங்களால், சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தி மற்றும் தொலைதொடர்பு சிக்னல்களை வேறுபடுத்த முடியாததே.
சூரிய புயல் நேரமானது, பூமியில் உள்ள ஆண்டனா அமைந்திருக்கும் இடம், பூமத்திய ரேகைக்கு மேல் உள்ள செயற்கைகோளின் சுற்றுப்பாதை அமைவிடம், பூமியில் உள்ள ஆண்டனாவின் அளவு மற்றும் பெறும் அலைவரிசையின் அளவை பொறுத்து அமைகிறது. இந்த செயற்கைகோள் செயலிழப்பானது, சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
சூரியன், செயற்கைகோள் மற்றும் பூமியில் உள்ள தகவல் பெறும் நிலையங்கள் சற்றே ஒரே திசையில் இருக்கும் போது, செயற்கைகோள் செயலிழப்பு சிறிது நேரம் நீடிக்கிறது. சூரியனானது, செயற்கைகோளுடனும், பூமியில் உள்ள தகவல் பெறும் நிலையங்களுடன் நெருங்க நெருங்க செயற்கைசெயலிழப்பு நேரம் அதிகமாகிறது.
சூரியன் செயற்கைகோள் மற்றும் பூமியில் உள்ள தகவல் பெறும் நிலையங்கள் துல்லியமாக ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, செயற்கைகோள் செயலிழப்பு நேரம் அதிகமாக உள்ளது. சூரியன் நகர துவங்கியதும், இந்த நேரம் சற்று குறைய துவங்குகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 3 தினங்களாகவே தொலைக்காட்சி ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தடங்கலுக்கு வருத்தம் தெரிவிக்குமே தெரியலையே.