ராணுவ வீரர் மனைவி பலாத்காரம் செய்து படுகொலை.. திருவண்ணாமலை அருகே அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ராணுவ வீரர் மனைவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை: கண்ணமங்கலத்தில் ராணுவ வீரர் மனைவியை பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபர்கள், 70 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது அந்தப்பகுதி மக்களிடம் பீதியை உண்டாக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூர் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சங்கரன். இவரின் மனைவி காந்தரூபி. இவர்களின் மகன் சக்திவேல். பிளஸ் டூ மாணவர்.
இவர்களது வீடு, ராமச்சந்திரபுரம் கிராமத்தில் கல்பட்டு, அரசம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ளது. சங்கரன், தற்போது அசாமில் பணியாற்றி வருகிறார். காந்தரூபி வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை மகன் சக்திவேல் டியூசன் சென்றிருந்தார். டியூசன் முடிந்து 9 மணியளவில் மகனும் வீட்டுக்கு வந்தார். வீட்டினுள் அம்மா இல்லாதது போல உணர்ந்துள்ளார்.
இதையடுத்து தாயை தேடி சமையல் அறைக்கு சென்றார் சக்திவேல். வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே வீசப்பட்டு கிடந்தன. இதனால் திகைத்து போன மகன் சக்திவேல், ''அம்மா அம்மா'' என்று அழைத்தபடியே சமையல் அறையை நோக்கி ஓடியுள்ளார்.
அப்போது, தாய் காந்த ரூபி நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் சக்திவேல் உடனடியாக, அருகே வசிக்கும் பெரியப்பா வீட்டுக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தார். பெரியப்பா குமார், பெரியம்மாள் சரளா மற்றும் உறவினர்கள் விரைந்து ஓடி வந்தனர்.
கண்ணமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரணி டி.எஸ்.பி. ஜெரீனா பேகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, மனோகரன், ரங்கநாதன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர்.
காந்தரூபியின் உடலை பார்வையிட்டு தடயங்களை சேகரித்ததில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரை நிர்வாணப்படுத்திய மர்மநபர்கள் வலுகட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, தப்ப முயன்ற காந்தரூபியின் தலையை சுவற்றில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காந்தரூபியின் கணவர் ராணுவத்தில் பணி புரிவதால், அவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.