எப்போதும் 2 விரல்களை காட்டும் ஜெ. ஏதும் சொல்லாமலேயே போய்விட்டார்: சாலமன் பாப்பையா
சென்னை: எப்போதும் இரு விரல்களைக் காட்டிச் செல்லும் ஜெயலலிதா இன்று ஏதும் சொல்லாமலேயே புறப்பட்டுப் போய் விட்டார் என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா கூறுகையில்,
அப்பல்லோ மருத்துவமனை வீதிகளில் தவம் கிடந்த மக்கள் உறங்கியும் உறங்காமலும், உடுத்தியும் உடுக்காமலும், கடந்த 2 நாட்களாக ஏக்கம் நிறைந்த விழிகளோடும் எதிர்பார்ப்பு நிறைந்த இதயத்தோடும் நெஞ்சில் அடித்தும் தலையில் அடித்தும், முகம் சிவந்து விழிகள் அழுது, கலங்கிப் புரண்டு கிடந்த காட்சி எவரையும் உலுக்கிவிடும்.
இப்படி ஒரு தலைவர் இந்த மண்ணில் அரசியல் நடத்தி திரைத்துறை ஒரு சகாப்தமாக பல்வேறு மொழிகளிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி, தமிழகத்தின் நகரங்களிலும், கிராமங்களிலும் சிறார்களையும், இளைஞர்களையும், வயது முதிர்ந்தவர்களையும், பெண்களையும் தன் வயப்படுத்தி வாழ்ந்து மறைந்த ஒரு அற்புதமான ஆத்மா. எப்போதும் இரு விரல்களைக் காட்டிச் செல்லும் அவர் இன்று ஏதும் சொல்லாமலேயே புறப்பட்டுப் போய் விட்டார்.
தமிழகத்தில் அவர் பதித்த தடம் எந்தத் துறையாக இருந்தாலும் அந்த தடம் அரசியல் தடம், கலைத்தடம் எல்லாம் அவரது பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கும். தமிழக மக்கள் அவரது பெயரை வரலாற்றில் பதிவு செய்து கொள்வார்கள்.