இடிந்து விழுந்த சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை ரூ. 50 லட்சத்தில் பராமரிக்கப்பட்டதாமே!
சோமனூர் பஸ் நிலையத்தில் கடந்த ஆண்டுதான் ரூ.50 லட்சத்துக்கு பராமரிப்பு பணி செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சோமனூர்: 5 பேரை காவு கொண்ட சோமனூர் பஸ் நிலையத்தின் பராமரிப்பு பணி கடந்த ஆண்டுதான் ரூ.50 லட்சம் செல்வு செய்து நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது சோமனூர். இங்குள்ள பஸ் நிலையம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியக் கூடியது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிலையத்தின் மேற்கூரை கடந்த 7-ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
அதிர்ச்சி
இந்த சம்பவத்தில் தமிழக மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பஸ் நிலையத்தை சீரமைக்க கோரியும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
பேருந்து நிலைய கூரையில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
பராமரிப்பு பணி
5 பேரை காவு கொண்ட சோமனூர் பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பேரூராட்சி அதிகாரி ஒருவர் கையொப்பமிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரூ.50 லட்சத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டடம் ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த லட்சணத்தில்...
ரூ. 50 லட்சம் செலவழித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பேருந்து நிலையம் இடிந்து விழுந்துள்ளது. எந்த லட்சணத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டால் இப்படி ஓராண்டுக்குள் இடிந்து விழும் என்றும் அப்பாவி மக்களின் உயிர் என மலிவாக போயிற்றா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.