பாஜக - அதிமுக உறவில் ஏற்பட்ட விரிசல்.. டிடிவி தினகரன் பக்கம் ஒதுங்கும் முக்கிய நிர்வாகிகள்!
அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், டிடிவி தினகரன் பக்கம் நகர்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சென்னை: அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், டிடிவி தினகரன் பக்கம் நகர்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் ரெய்டு சீசன் தொடங்கி இருக்கிறது. மத்திய அரசின் மேல்பார்வையில் இயங்கும் சிபிஐ நேரடியாக தமிழக அமைச்சர், முன்னாள் அமைச்சர், டிஜிபி என்று எல்லோர் அலுவலகம் வீடுகளிலும் சோதனை செய்துள்ளது.
இதனால் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது ஆளும் அதிமுக தரப்பு. இது அந்த கட்சியில் பெரிய பிளவையும் ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் சில அதிமுக நிர்வாகிகள்.
பாஜக கோபம்
பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக ஆட்சி நடக்கிறது என்று ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், மத்திய அரசின் தொடர் ரெய்டு காரணமாக உண்மையாகவே பாஜக மீது ஆளும் அதிமுக தரப்பு கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பல பழிகளை சுமந்து கொண்டு, இப்படி ரெய்டுகளையும் சுமக்க வேண்டுமா என்று அதிமுகவில் சிலர் நினைப்பதாக கூறுகிறார்கள்.
தொடர் தாக்குதல்
இந்த நிலையில் அதிமுக தரப்பில் கடந்த இரண்டு நாட்களாக, பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க தொடங்கி உள்ளனர். ஆம், அதிமுகவை சேர்ந்த எம்பி தம்பிதுரை ஒரு மாதம் முன்பே பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று கூட, செல்லூர் ராஜு பாஜகவிற்கு எதிராக பேசி இருந்தார்.
ஏற்கனவே தூது
இதெல்லாம் தினகரனுக்கு அதிமுகவினர் விடுக்கும் தூது என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். தினகரன் ஒருவர்தான் பாஜகவுடன் மோதுவதற்கு சரியானவர் என்று அவருக்கு மீண்டும் அதிமுக தரப்பு தூது விடுவதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தீர்ப்பு எப்படி வரும்
தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பிற்காக காத்து இருக்கிறது. அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம். இந்த வழக்கில் தினகரன் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படி நடக்கும் முன்பே தினகரனிடம் ராசியாகிவிடலாம் என்று அதிமுகவில் சிலர் நினைப்பதாக தகவல்கள் வருகிறது.
சேர்கிறார்கள்
இதன் காரணமாகவே சில அதிமுக நிர்வாகிகள், தினகரனுக்கு ரகசியமாக தூது அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தூதுவிடும் நிகழ்வு ஒரு அதிமுக எம்பி மூலம் விரைவில் வெளிப்படையாக விடப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். இன்னும் இரண்டு மாதத்திற்குள் அதிமுகவின் எதிர்காலம் எதிர்காலம் தெரியு என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.