மெட்ரோ வாட்டர்... மாநகராட்சி போக்குவரத்து பணிகளுக்கு தடை இல்லை- ராஜேஷ் லக்கானி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருந்தாலும் மக்களுக்கான முக்கிய பணிகளை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் முக்கிய பணிகளை தங்கள் அனுமதி பெற்று மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோ வாட்டர், மாநகராட்சி போக்குவரத்து உள்ளிட்ட டெண்டர் பணிகள் அவசரம், அத்தியாவசியம் என்றால் ஆணையத்தின் அனுமதி பெற்று செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என லக்கானி விளக்கியுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்துவிட்டு அந்தந்த துறை தலைவர்கள் தினசரி பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் லக்கானி விளக்கியுள்ளார்.
மிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்து விட்ட நிலையில் ஓட்டுச்சாவடி அமைப்பது, மனு பெறுவது, பரிசீலனை செய்வது, ஓட்டு எண்ணிகை மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் தேர்தல் ஏற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.