குட்கா விவகாரத்தில் சிபிஐயிடம் உண்மைகளை கக்க இருந்த ஜார்ஜ்... பரபரப்பு பின்னணி... நடந்தது என்ன?
சென்னை: குட்கா விவகாரத்தில் சிபிஐயிடம் தனக்கு தெரிந்த உண்மைகளை கூறிவிடலாம் என ஜார்ஜ் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குட்கா, பான் மசாலா, மாவு உள்ளிட்ட போதை வஸ்துகளை தமிழகத்தில் விற்பதற்கு ஜெயலலிதா கடந்த 2013-ஆம் ஆண்டு தடை செய்தார். அப்போது காவல் துறை ஆணையராக இருந்தவர் ஜார்ஜ். இவர் சென்னை கமிஷனராக 3 முறை பதவி வகித்துள்ளார். இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி மாதவரத்தில் உள்ள குட்கா கிடங்கில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு டன் கணக்கில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குட்கா நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு டைரியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கடிதம்
அந்த டைரியில் குட்கா தடை செய்யப்பட்ட பிறகு அதை விற்பனை செய்ய காவல் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரி குறித்தும் அவரிடம் பெற்ற வாக்குமூலம் குறித்து தமிவக தலைமை செயலாளருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்தனர்.
ஜார்ஜ் கடிதம்
எனினும் அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் தமிழக டிஜிபி ராஜேந்திரன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு குட்கா விற்பனையில் தொடர்புடைய அதிகாரிகளிடம் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். அதுவும் போலீஸ் அல்லாத வேறு அமைப்பினர் நடத்த வேண்டும் என வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு ஜார்ஜ் கடிதம் எழுதியிருந்தார்.
பதவி உயர்வை
இந்நிலையில் ஜார்ஜுக்கு கிடைக்கவிருந்த பணி நீட்டிப்பு மற்றும் பதவி உயர்வுக்கு குந்தகம் விளைவிக்கவே இதுபோன்ற ஒரு சதி வலை பின்னப்பட்டுள்ளது. மாதம் ரூ.20 லட்சத்தை ஜார்ஜுக்கு கொடுத்தது போல் யாரோ அவரது பெயரை சேர்த்து விட்டுள்ளனர். ஆதாயம் பெற்ற உயரதிகாரிகள் இருக்க தன்னை சிக்க வைக்க சதி செய்யப்படுவதை உணர்ந்த ஜார்ஜ், சிபிஐ அதிகாரிகளிடம் எல்லா உண்மைகளையும் சொல்வதற்கு தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் ரெய்டு
இதன் அடிப்படையில் இன்றைய தினம் சென்னையில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, இன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. மாதவராவின் டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா, உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.