துப்பாக்கி சூடு பற்றி முன்கூட்டியே அறிந்த முக்கிய பிரமுகர்கள்.. கலங்கடிக்கும் கள தகவல்கள்
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில், நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு குறித்து சிலருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் 22ம் தேதி 100வது நாளை எட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். மறுநாளும் துப்பாக்கி சூடு தொடர்ந்தது. இதுவரை மொத்தம் 13 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுகள் பாய்ந்த இடம்
இதனிடையே 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, துப்பாக்கி சூடு நடத்தப்படப்போகிறது என்பது, சில முக்கிய பிரமுகர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், கொல்லப்பட்டவர்கள் உடலில் பாய்ந்த குண்டுகள் துளைத்த இடங்களை வைத்து பார்க்கும்போது இது குறிபார்த்து சுடப்பட்டதை போலத்தான் தெரிந்தது.
திட்டமிடப்பட்டதா
வேனின் மீது மேல் இருந்தபடி குறிபார்த்து சுடும் ஸ்னிப்பர்களை வைத்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ மூலம் அம்பலமானது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்தியவர்கள். எனவே, இதையெல்லாம் வைத்து பார்த்தால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
முக்கிய பிரமுகர்கள் எங்கே?
இதனிடையே, துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் யாருமே இல்லாதது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் துவங்கியபோது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோஷமிட்டு கைதாகி போலீஸ் வேனில் பாதுகாப்பாக இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டார் அந்த முக்கிய கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர். இதன்பிறகு துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி வாய் திறக்கவில்லை.
கோபத்தில் மக்கள்
இதேபோல வியாபாரி சங்கத்தை சேர்ந்த சிலருக்கும் முன்கூட்டியே போலீசார் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு அவர்களை வரவிடாமல் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மேற்கண்ட உள்ளூர் கட்சி தலைவர் மற்றும் அமைப்புகள் மீது கோபத்தில் உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை தலைமையிடம் இவர்களுக்கு உள்ள நெருக்கம்தான் இப்படியெல்லாம் திட்டமிட வைத்து கழுத்தறுக்க வைத்ததாக, கள நிலவரங்கள் கூறுகின்றன.