சிறப்பான முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் என்ன தெரியுமா?
சென்னை: சட்டமன்றத்தின் சிறப்பான முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதியின் பதில் காமராஜர். அவையில் பேசாமல் இருந்தாலும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியவர் என்பதால் அவர் சிறப்பான முதல்வர் என்று கருணாநிதி ஒரு தருணத்தில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் சட்டசபைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவும் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு கருணாநிதி குறித்த சுவாரஸ்மான தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். இதில் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் குறித்தும், சட்டமன்றம் குறித்து அவர் கூறிய கருத்துகள் உள்ளன.
சிறப்பான முதல்வர்
கருணாநிதியை பொருத்தமட்டில் சிறப்பான முதல்வர் யார் என்றால் அவரது பதில் பெருந்தலைவர் காமராஜர். அவையில் பேசாமல் இருந்தாலும் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார்.
முதல் பேச்சு
கடந்த 1957-இல் வெற்றி பெற்றபோது குளித்தலைத் தொகுதியில் உள்ள நங்கவரம் பண்ணை விவசாயிகளின் "கையேரு வாரம்-மாட்டேரு வாரம்" என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் கருணாநிதி பேசிய முதல் பேச்சாகும்.
பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் சட்டசபையில் முதல்நாள் அனுபவம் இருந்ததாம்.
அதிக நேரம் பேசிய நாள்
சட்டசபையில் கருணாநிதி அதிக நேரம் பேசிய நாள்கள் பல உண்டு. இருப்பினும் 1997-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, அவர் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.
பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?
எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்து நிற்பவர் அறிஞர் அண்ணாதான். அவருக்கு பிடித்த சபாநாயகர், ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-பின்னர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.
மாணவனாக நினைப்பாராம்
சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது கற்றுக் கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். சட்டமன்றத்தில் முதல் முதலாக கருணாநிதி உட்கார்ந்திருந்த இருக்கை எண் 170.
அண்ணாவின் பாராட்டு
பெரும்பாலும் சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா பாராட்டியிருக்கிறார். கருணாநிதியின் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்க என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில், மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதற்காக அமைச்சரவையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.
கவர்ந்த சட்டமன்ற உறுப்பினர்
கருணாநிதியை கவர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜோதியம்மாள். காமெடியாக பேசும் சட்டமன்ற உறுப்பினர் ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த தட்சிணாமூர்த்தி கவுண்டர்.