சேகர் ரெட்டியை கொலை செய்ய ஜெயிலில் திட்டம் தீட்டுகிறார்கள்... மு.க.ஸ்டாலின் பகீர்
மணல் மாஃபியா சேகர் ரெட்டியை கொலை செய்ய சிறைச்சாலையில் திட்டம் தீட்டுகிறார்கள் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: மணல் மாஃபியா சேகர் ரெட்டியை கொலை செய்ய சிறையில் திட்டம் தீட்டுகிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தால், சிறைச்சாலைகள் பற்றி அதிகம் பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து, சிறப்பு வசதிகள் எல்லாம் செய்து கொண்டதாக, பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
மணல் மாஃபியா கும்பல் தலைவர் சேகர் ரெட்டி, இப்போது ஜாமீன் பெற்றுள்ளார். அவரை கொலை செய்ய சிறையில் இருப்பவர்களே திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிறை அதிகாரிகளே எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து, சேகர் ரெட்டியே டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அவரைக் கொல்ல முயற்சிக்கும் காரணம் என்னவென்றால், அவர் உயிரோடு இருந்தால், பல விவகாரங்கள், பல செய்திகள் எல்லாம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் தான் என்று ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
சிறைச்சாலைகளில் மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.