கட்சியை அழிக்கிறார் தினகரன்.. சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்!
தினகரன் தான் கட்சியை அழிப்பதாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவிடம் போட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தினகரன் தான் கட்சியை அழிப்பதாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவிடம் போட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லீரல் மற்றும் கிட்னி செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு வந்தார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று கணவரை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா.
அரசியல் காய்களை நகர்த்தி..
அவருடைய பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே சசிகலா அரசியல் காய்களை நகர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினகரனை போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்
சசிகலாவிடம் பேசிய நிர்வாகிகள் சிலர் தினகரன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். ஆதரவாக இருப்பவர்களையும் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.
குளறுபடிகளுக்கு காரணம்
மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்காமல் தினகரன் சர்வாதிகாரியைப் போல் நடந்துகொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீடியாக்களிடம் தினகரன் பேசியதே கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.
குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சி
ஆதரவாளர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் தான் அவருக்கு எதிராக திரும்ப வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். அனைத்து நிர்வாகிகளும் தினகரன் மீது அதிருப்தியை கொட்டவே அதிர்ச்சியடைந்த சசிகலா தினகரனுக்கு சில ஆலோசனைகளை கூறி எச்சரித்தாக தெரிகிறது.
அஞ்சும் சசிகலா
கட்சியை அழிப்பதே தினகரன்தான் என்றும் நிர்வாகிகள் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். கட்சியா தினகரனா என சூழல் ஏற்பட்டால் தனக்கு கட்சிதான் முக்கியம் என்றும் சசிகலா கூறியுள்ளார். கட்சி கையை விட்டு சென்றுவிடுமோ என்று சசிகலா அஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி
எப்பாடுபட்டாவது, கட்சியை குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள சசிகலா, குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இன்றுடன் பரோல் நிறைவடைய உள்ள நிலையில் இன்று பிற்பகல் அவர் பெங்களூரு புறப்படுவார் என கூறப்படுகிறது.