சென்னையில் சில தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை- பெற்றோர், மாணவ, மாணவியர் அதிருப்தி!
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிகளை மூடுவதாக முதலில் அறிவித்து, அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அதைத் திரும்பப் பெற்ற தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவுப்படி இன்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னையில் சில முக்கியமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை.
ஜெயலலிதாவுக்கு விதித்த தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் பள்ளிகளை மூடி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இதைக் கண்டித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து தங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி இன்று பெரும்பாலான பள்ளிகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. ஆனால் சென்னையில் சில முக்கியமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை.
முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளிகள், ஸ்பார்டன் பள்ளி ஆகியவை திறக்கப்படவில்லை. இதேபோல நகரின் சில பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவும் கூட இன்று திறக்கப்படவில்லை.
இதனால் பள்ளிகள் இருப்பதாக கருதி காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் கடும் ஏமாற்றமடைந்தனர். அதேபோல திடீரென இப்படி சொல்லாமல் கொள்ளாமல் பள்ளிகளை மூடியதால் பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.