ஜெ.வோடு சேர்ந்து கோர்ட் படிகளை ஏறி இறங்கிய சசிகலா.. அவரது டைரிக் குறிப்பு இதோ!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான பெரும்பாலான வழக்குகளில் சசிகலாவும் ஒரு இணை குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறார்.
இவர் மீதும் ஏராளமான வழக்குகள் பாய்ந்துள்ளன. இவற்றில் சில வழக்குகளிலிருந்து சசிகலா விடுபட்டுள்ளார்.
தற்போது நாளை பெங்களூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்படவுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும் ஒரு இணை குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
சசிகலாவுக்கு எதிரான வழக்குகள் குறித்த ஒரு பார்வை
சொத்துக் குவிப்பு வழக்கு
வருமானத்திற்கு மீறிய வகையில் முதல்வர் ஜெயலலிதா ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்தது தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும் இணைக்கப்பட்டுள்ளார்.
ஜெ ஜெ டிவி வழக்கு
முதல்வர் ஜெயலலிதாவைத் தலைவராக கொண்டு முன்பு செயல்பட்டு வந்த ஜெஜெ டிவி சார்பில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் 6.80 லட்சம் டாலர் பணத்தை செலுத்தியது தொடர்பாக சசசிகலா மீது அன்னியச் செலாவணி சட்டத்தை மீறியதாக பொருளாதார குற்றத் தடுப்பு இயக்குநரகம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் 1996ம் ஆண்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார் சசிகலா.
பெரா விதி மீறல்
இந்த குற்றச்சாட்டு என்னவென்றால் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு செயற்கைக் கோள் நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கும், சசிகலா பணத்தை கட்டியதாகும். இதற்கு உரிய அனுமதி வாங்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாகும்.
பண மோசடி
மலேசியாவில் உள்ள ஒரு போலியான வங்கிக் கணக்கில், இந்தியாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கிலிருந்து 3.42 லட்சம் டாலர் பணத்தை சசிகலா முதலீடு செய்ததாக ஒரு வழக்கை பொருளாதாரக் குற்றத் தடுப்பு இயக்குநரகம் தாக்கல் செய்தது.
வெளிநாட்டு முதலீடுகள்
சசிகலாவும், அவரது உறவினர்களான பாஸ்கரன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ரூ. 35 கோடிக்கு சமமான அமெரிக்கப் பணத்தை விர்ஜீன் தீவுகளில் உள்ள பர்க்ளேஸ் வங்கியில் முதலீடு செய்ததாக ஒரு வழக்கை சிபிஐ தொடர்ந்தது.